சென்னை: தென்னிந்தியாவின் ‘கோல்டன் பேஸ் ஆப் சவுத் இந்தியா’ போட்டியின் தொடக்க நிகழ்வு சென்னையில் நடந்தது. எந்த அழகு போட்டியிலும் நடக்காத விதமாக, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அழகிப்போட்டி நடந்தது. இயக்குனர் விஜய் மற்றும் விண்டோ என்டர்டெயின்மென்ட் நிறுவனர்கள் வி.சரவணன், கோபிநாத் ரவி, ஏசிடிசி ஸ்டுடியோ நிறுவனர் ஹேமந்த் ஆகியோருடன் இணைந்து, ஆசிட் வீச்சுக்கு உள்ளானவர்களுக்கு தோல் தானம் செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக லக்ஷ்மி அறக்கட்டளையுடன் இணைந்து இந்த போட்டி நடந்தது. வெறும் அழகுப் போட்டியாக மட்டும் இல்லாமல், துன்பங்களில் இருந்து வலிமையுடன் மீண்டு வந்து வாழ்க்கையை எதிர்கொள்ளும் அழுத்தமான நினைவூட்டலாக இந்த நிகழ்வு அமைந்தது என விஜய் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் நடிகை எமி ஜாக்சன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் மற்றும் மிஸ் போட்டியின் வெற்றியாளரான அஷ்விகாவுக்கு முடிசூட்டினார். நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரேயா சரண், மிஸஸ் போட்டியின் வெற்றியாளரான நம்ரதா சிங்கிற்கு முடிசூட்டினார். பிராண்ட் அம்பாசிடரான நடிகை பார்வதி நாயர் மற்றும் நடிகை யாஷிகா ஆனந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.