சென்னை: ஆர்.கே என்டர்டெயின்மென்ட் சார்பில் ரமேஷ் குமார் தயாரிக்க, பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம், ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. வரும் 28ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தில் சுரபி ஹீரோயினாக நடித்துள்ளார். ஆஃப்ரோ இசை அமைத்துள்ளார். தீபக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் குறித்து சந்தானம் கூறியதாவது: எனது நடிப்பில் வெளியான சில படங்கள், ‘இதெல்லாம் சந்தானம் படங்கள் மாதிரி இல்லையே’ என்று வருத்தப்பட்ட ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காக, இப்போது ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தை முழுக்க, முழுக்க சந்தானம் படமாக எங்கள் குழுவினரின் ஒத்துழைப்புடன் உருவாக்கியுள்ளோம். ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் 2 பாகங்களும் பெரிய வெற்றி பெற்றன. ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படமும் ரசிகர்கள் மனதைக் கவரும். இதில் வரும் ஒவ்வொரு பேயும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
மற்ற ஹீரோக்களின் படங்களில், தொடர்ந்து நான் அவர்களுக்கு உதவுவது போன்ற கேரக்டர் அமைந்ததால்தான் ஹீரோவாக நடிக்க முடிவு செய்தேன். ஆனால், மற்ற ஹீரோக்களின் படங்களில் சுவாரஸ்யமான கேரக்டர் கிடைத்தால் நிச்சயமாக அவர்களுடன் இணைந்து நடிப்பேன். தியேட்டரில் நான் நடித்து வெளியாகும் படங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிப்பதால், இதுவரை நான் எனது ஹீரோயின்களுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடிக்கவில்லை. இதை எனது பட இயக்குனர்களும் விரும்பவில்லை. ஆனால், எல்லாவிதமான கேரக்டரிலும் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். எனவே, இனிமேலாவது இயக்குனர்கள் என்மீது கவனம் செலுத்தி, ஹீரோயின்களுடன் என்னை காதல் காட்சிகளில் நடிக்க வைக்க வேண்டும்.