சென்னை: மலையாளத்தில் 35க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள அனில் தமிழில் அறிமுகமாகும் படம், ‘சாயாவனம்’. தாமோர் சினிமா சார்பில் சந்தோஷ் தாமோதரன் தயாரிக்கிறார். சவுந்தரராஜா, தேவானந்தா, அப்புக்குட்டி, சந்தோஷ் தாமோதரன், ‘கர்ணன்’ ஜானகி, வெற்றிவேல் ராஜா, மேத்யூ மம்ப்ரா நடிக்கின்றனர். எல்.ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, மோகன வீணை நிபுணர் போலி வர்கீஸ் இசை அமைக்கிறார். விஜு ராமச்சந்திரன் திரைக்கதை எழுத, எல்.வி.முத்து கணேஷ் பின்னணி இசை அமைக்கிறார். குட்டி ரேவதி பாடல்கள் எழுதுகிறார். படம் குறித்து அனில் கூறுகையில், ‘நான் இயக்கிய ‘பகல்பூரம்’ என்ற படத்தின் மூலம் தாமோர் சினிமா தன் பயணத்தை தொடங்கியது.
இந்நிறுவனம் ‘வாழ்கண்ணாடி’, ‘இவர்’, ‘சந்திரோற்சவம்’, ‘குருஷேத்ரா’ உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது. வருடம் முழுவதும் அதிக மழை பொழியும் அடர்ந்த வனம் சூழ்ந்த ஒரு கிராமத்தில், புது மணப்பெண் எதிர்கொள்ளும் போராட்டத்தை ‘சாயாவனம்’ படம் விவரிக்கிறது. இத்தலைப்புக்கு ‘அடர்ந்த காடு’ என்று பொருள் இருக்கிறது. இது படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் குணத்தைக் குறிக்கும். ஒவ்வொரு கேரக்டரும் காடு போல் அடர்த்தியானது. அவர்களிடம் பல்வேறு ரகசியங்கள் மறைந்துள்ளன’ என்றார்.