திருவனந்தபுரம்: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார் நடிகை மமிதா பைஜு. ‘பிரேமலு’ மலையாள படம் மூலம் தென்னிந்தியாவில் பிரபலமாகிவிட்டார் அப்பட நாயகி மமிதா பைஜு. இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. வணங்கான் படத்தில் நடித்தபோது தன்னை இயக்குனர் பாலா தாக்கினார் என பரபரப்பு புகார் கூறியிருந்தார் மமிதா பைஜு. அதனால் அப்படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் கேரளாவில் நேற்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. கிடங்கூரை சேர்ந்த மமிதா பைஜு, ஓட்டு போடுவதற்காக கோட்டயம் தொகுதிக்குட்பட்ட பூத்துக்கு சென்றார். ஆனால் அங்கு அவருக்கு ஓட்டு இல்லை எனக் கூறிவிட்டனர். வாக்காளர் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டிருந்ததை அறிந்து மமிதா பைஜு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அவர் ஏமாற்றத்துடன் அங்கிருந்து வௌியேறினார். தேர்தல் ஆணையம் சார்பில் யூத் ஐகானாக தேர்வு செய்யப்பட்டு, அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விளம்பரங்கள் மூலம் மமிதா பைஜு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில் அவருக்கே ஓட்டு இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை வாக்களித்தவருக்கு இந்த முறை ஓட்டு இல்லாமல் போய்விட்டது. இதையெல்லாம் தேர்தல் ஆணையம்தான் கவனிக்க வேண்டும் என மமிதா பைஜு தரப்பினர் கூறினர்.