மும்பை: மலையாளத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற படம், ‘காதல்: தி கோர்’. இதில் தன்பாலின ஈர்ப்பாளர் கேரக்டரில் நடித்த மம்மூட்டியே இப்படத்தையும் தயாரித்திருந்தார். அப்படத்தை பார்த்து வியந்த பாலிவுட் முன்னணி நடிகை வித்யா பாலன், ‘காதல்: தி கோர்’ படத்தில் மம்மூட்டி நடித்த கேரக்டரில் பாலிவுட் ‘கான்’ நடிகர்கள் நடிப்பார்கள் என்று தனக்கு தோன்றவில்லை என்று சொல்லி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி: கேரளாவில் கல்வியறிவு அதிகம் கொண்ட பார்வையாளர்கள் இருக்கின்றனர் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். சமூகத்தை பிரதிபலிக்கும் விஷயங்களைச் செய்வது அங்கு எளிதாக இருக்கலாம். தென்னிந்திய ரசிகர்கள், ஆண் சூப்பர் ஸ்டார்களை கொண்டாடுகின்றனர். அப்படி இருக்கும்போது, மம்மூட்டி மேற்கொண்ட முன்னெடுப்பு பாராட்டத்தக்கது.
‘காதல்: தி கோர்’ படத்தில் தன்பாலின ஈர்ப்பாளர் கேரக்டரில் நடித்தது மட்டுமின்றி, படத்தை அவரே தயாரித்துள்ளார். தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான ஆதரவோ, அவர்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையோ சமூகத்தில் பரவலாக இருப்பதாக நான் நினைக்கவில்லை. அதுபோல், ‘காதல்: தி கோர்’ போன்ற ஒரு படத்தில் பாலிவுட் ‘கான்’ நடிகர்கள் நடிப்பார்கள் என்று எனக்கு தோன்றவில்லை. அதேவேளையில், இன்றைய தலைமுறையினர் அக்கருத்தை உடைப்பார்கள் என நம்புகிறேன். உதாரணமாக, ‘ஷுப் மங்கள் ஜியாதா சாவ்தான்’ படத்தில் ஆயுஷ்மான் குரானா தன்பாலின ஈர்ப்பாளர் கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தார்.