சென்னை: ஜே.எஸ்.எம் பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரித்துள்ள படம், ‘மங்கை’. குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘கயல்’ ஆனந்தி, துஷி, ராம்ஸ், ஆதித்யா கதிர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அப்போது குபேந்திரன் காமாட்சி பேசுகையில், ‘படத்தின் தலைப்பை பார்த்துவிட்டு, இது பெண்ணியம் சார்ந்த கதை என்று நினைக்கின்றனர்.
அது தவறு. மேலும், கருத்து ெசால்ல வேண்டும் என்பதற்காக இப்படத்தை உருவாக்கவில்லை. எனக்கு மிகவும் தெரிந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை, சினிமாவுக்கு ஏற்ப கற்பனை கலந்து இயக்கியுள்ளேன். ஆனந்தியை தவிர மங்கை கேரக்டருக்கு வேறு யாரும் பொருத்தமாக இருக்க முடியாது. நடிகர் ஜெயப்பிரகாஷ் மகன் துஷி ஹீரோவாக நடித்துள்ளார்.
ஒரு பெண்ணின் பயணத்தை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது’ என்றார்.ஆனந்தி பேசும்போது, ‘இதுவரை ஏற்றிராத கேரக்டரில் நடித்துள்ளேன். ‘கயல்’ ஒளிப்பதிவாளர் வெற்றி மகேந்திரன் மூலம் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. இந்த கேரக்டரில் நடிக்க முதலில் பயந்தேன். பிறகு ஏதோ ஒரு துணிச்சலுடன் நடித்து முடித்தேன். ஒரு பெண்ணைப் பற்றிய ஆணின் பார்வை குறித்து பேசும் விதமாகவும், ஒரு பயணத்தில் பெண் சந்திக்கும் நிகழ்வுகளையும் பற்றி சொல்லும் இப்படம், எனது கேரியரில் மிகவும் முக்கியமான படமாக இருக்கும். படத்தில் நடித்து முடித்த பிறகு கூட, மங்கை கேரக்டரில் இருந்து மீள முடியாமல் தவித்தேன்’ என்றார்.