2018ம் ஆண்டு மிஸ்.ஐதராபாத் அழகி பட்டம் வென்றவர் கௌரி பிரியா. அதன் பிறகு விளம்பர படங்களில் நடித்த அவர் தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் வெளியான ‘ரைட்டர் பத்மபூஷன்’ படம் அவருக்கு நல்ல புகழை பெற்றுக் கொடுத்தது. இந்த நிலையில் தமிழில் அறிமுகமாகி உள்ளார். ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள ‘மார்டன் லவ் சென்னை’ என்ற அந்தாலஜி வெப்சீரிஸில் நடித்துள்ளார். ராஜூ முருகன் இயக்கிய ‘லால்குண்டா பொம்மைகள்’ என்ற கதையில் ஷோபா என்ற கதாபாத்திரத்தில் வருகிறார். அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ‘தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் இருக்கும்.
எனக்கும் அப்படி ஒரு ஆசை இருந்தது. ஆனால் நான் அதற்கான பெரிய முயற்சி எதுவும் செய்யாமலேயே என்னை தமிழ் வாய்ப்பு தேடிவந்தது. அதை நான் நல்ல முறையில் தக்க வைத்துக் கொண்டேன். இயக்குனர் ராஜூ முருகன் என்னை ஒரு நடிகையாக மேலும் மெருகேற்றி நடிக்க வைத்தார். அச்சு அசலான சென்னை பெண்ணாக நடித்திருந்தேன். இப்போது தமிழில் நிறைய வாய்ப்புகள் வருகிறது. சிலவற்றை ஒப்புக் கொண்டிருக்கிறேன். தயாரிப்பு தரப்பில் இருந்து அறிவிப்புகள் வெளிவரும். நல்ல நடிகை என்ற பெயருடன் தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே என் ஆசை’ என்றார்.