ஷாரிக், அரண்.வி (படத்தின் இயக்குனர்), ஆசிஷ் ஆகியோர் இணை பிரியாத நண்பர்கள். அவர்கள் ஆளுக்கொரு லட்சியத்துடன் வாழ்ந்து வருகின்றனர். நாயகி அம்மு அபிராமியை ஷாரிக் காதலிக்கிறார். இந்நிலையில், ஒரே இடத்தில் இருக்கும் பல செல்போன் உரையாடல்களைப் பதிவு செய்யும் கருவி ஒன்றை அரண்.வி கண்டுபிடிக்கிறார். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட, மூன்று நண்பர்களும் கிழக்குக் கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரத்துக்கு காரில் ஜாலி ட்ரிப் செல்கின்றனர். அப்போது இன்னொரு நாயகி பவித்ரா லட்சுமி கடத்தப்படுவதைப் பார்க்கின்றனர். உடனே அவர்கள் தங்களது ஜாலி ட்ரிப்பை ரத்து செய்துவிட்டு, அரண்.வி கண்டுபிடித்த கருவியின் உதவியுடன் பவித்ரா லட்சுமியை மீட்க முயற்சி செய்கின்றனர். அதில் வெற்றி கிடைத்ததா? பவித்ரா லட்சுமி யார்? அவரைக் கடத்தியது யார் என்பது மீதி கதை.
‘ஜிகிரி ேதாஸ்து’ என்ற டைட்டிலுக்கு மிகவும் பொருத்தமான கதை இது. எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் சரி, நட்பை மட்டும் விட்டுக்கொடுக்காமல், கடைசிவரை ஒன்றாக இணைந்து தங்கள் நட்பைக் காப்பாற்றுகின்றனர். அம்மு அபிராமிக்கு ஷாரிக்கை காதலிப்பதை தவிர வேறு வேலையில்லை. பவித்ரா லட்சுமிக்கு வில்லனிடம் மாட்டிக்கொண்டு கதறுவதை தவிர வேறு வேலையில்லை. வில்லன் சிவன் கண்களிலேயே வில்லத்தனத்தைக் காட்டிவிடுகிறார். பரத், மதுமிதா சிரிக்க வைக்கின்றனர். அஸ்வின் விநாயகமூர்த்தியின் பின்னணி இசையும், ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவும் படத்துக்கு பெரிய பலமாக அமைந்துள்ளன. பவித்ரா லட்சுமியை மீட்கும் நண்பர்கள் சொல்லும் ஐடியாக்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. ஆனால், அதைச் செயல்படுத்தும் விதத்தில் சுவாரஸ்யம் குறைவு. நட்பு, காதல், ஆக்ஷன் என்று முழுநீள எண்டர்டெயின்மெண்ட் படத்தைக் கொடுக்க முயற்சி செய்துள்ளார், இயக்குனர் அரண்.வி. அதில் ஜெயித்தும் இருக்கிறார்.