சென்னை: ஒளிப்பதிவாளராக இருந்து நடிகர் ஆனவர் நரேன். ‘சித்திரம் பேசுதடி’, ‘நெஞ்சிருக்கும் வரை’, ‘அஞ்சாதே’, ‘பள்ளிக்கூடம்’, ‘தம்பிக்கோட்டை’, ‘முகமூடி’, ‘கத்துக்குட்டி’, ‘கைதி’, ‘விக்ரம்’ உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் நடித்து முடித்துள்ள படம் ‘ஆத்மா’. இந்த படத்தில் நரேனுடன் ஸ்ரீதா சிவதாஸ், பால சரவணன், காளி வெங்கட், கனிகா உள்பட பலர் நடித்துள்ளனர். பிரபல மலையாள இயக்குனர் சுகீத் இயக்கி உள்ளார், காத்ரிஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நஜீப் காதிரி தயாரித்துள்ளார். விவேக் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார், மங்கள் சுவர்னன், சஸ்வத் சுனில் குமார் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் நரேன் ஆட்டிசம் பாதித்த இளைஞராக நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எனது கேரியரில் இது முக்கியமான படம். இந்த கதையை கேட்டவுடன் என்னால் இப்படியான கேரக்டரில் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது.
இது தொடர்பாக வந்த சில ஆங்கில படங்கள், கமல் நடித்த சிப்பிக்குள் முத்து படங்களை பார்த்து நடிக்கலாம் என்ற தைரியம் பெற்றேன். ஆட்டிசம் பாதித்தவர்களை சந்தித்து அவர்களது குரல்மொழி, உடல் மொழியை கற்றுக் கொண்டேன். ஆட்டிசம் பாதித்த இளைஞன் ஒருவன் துபாயில் பணியாற்றுகிறான். அவன் தங்கி இருக்கும் அறையில் ஒரு பிலிபினோ பெண்ணின் குரல் அடிக்கடி கேட்கிறது. அது ஒரு ஆவி என்பதை அறிந்து கொள்கிறான். அந்த குரல் அவனுக்கு மட்டும் ஏன் கேட்கிறது. அதனால் அவன் என்ன மாற்றம் பெறுகிறான் என்பது மாதிரியான கதை. எனது ரூம் மேட்டாக பால சரவணனும், முதலாளியாக காளி வெங்கட்டும் நடித்துள்ளனர். என்னை நேசிக்கும் பெண்ணாக தா சிவதாஸ் நடித்துள்ளார். இந்த கேரக்டர் எனக்கு விருதுகளை பெற்றுத் தரும் என்கிறார்கள். அதில் பெரிதாக நம்பிக்கை இல்லை. எனது திறமைக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தால் போதும்.