சென்னை: சத்யராஜ் நடிப்பில் வெளியான புரட்சிகர கதை கொண்ட தமிழ் படம், ‘வெங்காயம்’. இதில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த சங்ககிரி மாணிக்கம், இப்படத்தை எழுதி இயக்கிய சங்ககிரி ராஜ்குமாருடைய தந்தை. தற்போது முதன்மையான வேடத்தில் அவர் நடிக்கும் படம், ‘அம்புநாடு ஒன்பது குப்பம்’. இதை பி.கே பிலிம்ஸ் சார்பில் பூபதி கார்த்திகேயன் தயாரித்திருக்கிறார்.
முக்கிய வேடங்களில் ஹர்ஷிதா, பிரபு மாணிக்கம், மதன், ரமேஷ், மித்ரன் நடித்துள்ளனர். இது, ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற நாவல் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள படமாகும்.கிராமங்களில் இரு சமூகங்களில் நடக்கும் சாதி ஒடுக்குமுறை பற்றிய கதை கொண்ட இப்படம், இன்றைய சூழலிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நிஜத்தில் இருக்கக்கூடிய ஒன்பது நாட்டு ஊர் தலைவர்களைப் பற்றி பேசுகிறது. ஓ.மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நாட்டுப்புறப் பாடகரும், குணச்சித்திர நடிகருமான அந்தோணி தாசன் இசை அமைத்துள்ளார். ஜேம்ஸ் வசந்தன் பின்னணி இசை அமைத்துள்ளார். லாவரதன், கடல்வேந்தன் பாடல்கள் எழுதியுள்ளனர். ராஜாஜி திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். கந்தர்வக்கோட்டை, கரம்பக்குடி ஆகிய பகுதிகளில் ஷூட்டிங் நடந்துள்ளது. அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.