திருவனந்தபுரம்: கொடைக்கானல் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து மலையாளத்தில் உருவான படம், ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. உலகம் முழுக்க 241 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்த இப்படத்தை சிதம்பரம் இயக்கினார். சவுஃபின் ஷாஹிர், நாத் பாஸி உள்பட பலர் நடித்தனர். சமீபத்தில் இப்படத்தைப் பார்த்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆஸ்கர் விருதுக்கு தகுதி கொண்ட இப்படத்தில் அனைத்து விஷயங்களும் சரியாக கையாளப்பட்டுள்ளது. ஒருவேளை இப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை என்றால், இனிமேல் நான் ஆஸ்கர் விருதுகளையே நம்ப மாட்டேன். மலையாளப் படவுலகை பெருமைப்படுத்திய சிதம்பரம் மற்றும் குழுவினருக்கு நன்றி. இப்படத்தை இப்போதுதான் பார்த்தேன். இந்த தாமதத்துக்காக படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.