ஐதராபாத்: தமிழில் விநய்யுடன் நடித்த ‘இருவர் உள்ளம்’ படத்தை தொடர்ந்து தற்போது ஜீவா, மிர்ச்சி சிவா நடிக்கும் ‘கோல்மால்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் பாயல் ராஜ்புத், இதற்கு முன்பு இந்தி, பஞ்சாபி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் நடித்துள்ள ‘செவ்வாய்கிழமை’ என்ற பான் இந்தியா படம், வரும் நவம்பர் 17ம் தேதி திரைக்கு வருகிறது. தெலுங்கில் வெளியான ‘ஆர்எக்ஸ் 100’, ‘மகா சமுத்திரம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு அஜய் பூபதி கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள இப்படத்தை முத்ரா மீடியா ஒர்க்ஸ் சார்பில் சுவாதி ரெட்டி குணுபதி, சுரேஷ் வர்மா தயாரித்துள்ளனர்.
வித்தியாசமான தோற்றத்தில், ஷைலஜா என்ற கேரக்டரில் பாயல் ராஜ்புத் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் அஜ்மல் அமீர், ஸ்ரீதேஜ், சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஷ், லக்ஷ்மன் நடித்துள்ளனர். திரில்லர் ஜானரில் உருவான இப்படத்தின் 2வது பாடலான ‘என் நெஞ்சம் நீந்துதே’ சமீபத்தில் வெளியானது. ‘கந்தாரா’ பி.அஜனீஷ் லோக்நாத் இசை அமைத்துள்ளார். பழனிபாரதி எழுதிய பாடலை ஹர்ஷிகா தேவநாத் பாடியுள்ளார். அழகான கிராமப் பின்னணியில் இப்பாடல் படமாக்கப்பட்டுள்ளது. இதில் பாயல் ராஜ்புத், அஜ்மல் அமீர் நடித்துள்ளனர். ஏ கிரியேட்டிவ் ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்க, தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். தாஜுதீன் சையத், ராகவ் வசனம் எழுதிஇருக்கின்றனர்.