சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில், ‘ரங்கூன்’ படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் சாய் பல்லவி ஜோடியாக நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். தற்காலிகமாக இப்படத்துக்கு ‘எஸ்கே23’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 2020ல் ரஜினிகாந்த், நயன்தாரா நடித்த ‘தர்பார்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், கடந்த 3 வருடங்களாக எந்தப் படத்தையும் இயக்கவில்லை.
இந்நிலையில், தற்போது தனது புதிய படத்தை தொடங்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். இவர், கனனடத்தில் ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ என்ற படத்தில் நடித்தவர். அனிருத் இசை அமைக்கிறார். இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நாளை சிவகார்த்திகேயனின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்படும் என்று தெரிகிறது.
முக்கிய வேடங்களில் மோகன்லால், வித்யூத் ஜம்வால் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆக்ஷன், சென்டிமெண்ட், காதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாக்கப்படுகிறது. ஏற்கனவே 2014ல் வெளியான ‘மான் கராத்தே’ என்ற படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுத, அவரது உதவியாளர் திருக்குமரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.