பள்ளி பருவம் முதல் பக்குவமான வயது வரையிலான ஒரு இளைஞனின் காதல் கதைகள்தான் படம். கதை நாயகன் சபாவுக்கு (அசோக் செல்வன்) பள்ளியில் படிக்கும்போதே உடன் படிக்கும் இஷா(கார்த்திகா முரளிதரன்) மீது காதல். ஆனால், மனதில் உள்ள பயத்தின் காரணமாக காதலை சொல்லாமலேயே கல்லூரிக்கு வந்து விடுகிறார். கல்லூரியில் ரியாவுடன் காதல். ஆனால், அதுவும் முறிந்து போகிறது. படித்து முடித்து விட்டு வேலை தேடும்போது மீண்டும் தன் பள்ளி காதலி இஷாவை சந்திக்கிறார். முந்தைய காதல்களில் செய்த தவறுகளை சரிசெய்து மீண்டும் இஷாவை காதலிக்க முயற்சிக்கிறார். அந்த முயற்சி பலித்ததா என்பது மீதி கதை.
பள்ளி காலத்தில் வருவது இன கவர்ச்சி, அதன் பிறகு வருவது பாலியல் விருப்பம், பக்குவமான காலத்தில் வரும் காதலே சரியானது என்பதுதான் படம் சொல்ல வரும் செய்தி. அதனை காதல், கலாட்டா, காமெடி என கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன். அசோக் செல்வனின் இயல்பான நடிப்பும், அவரது நண்பர்களின் காமெடியும் அதற்கு நன்றாக உதவி இருக்கிறது. பள்ளி மாணவன் முதல் பக்குவமான இளைஞன் வரை தோற்றத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும் நல்ல முன்னேற்றம் காட்டி இருக்கிறார் அசோக் செல்வன். நாயகிகள் கார்த்திகா முரளிதரன், சாந்தினி, மேகா ஆகாஷ் ஆகியோர் ஸ்லோ மோஷனில் நடந்து அழகு காட்டினாலும் நடிப்பிற்கு பெரிய ஸ்கோப் இல்லை. என்றாலும் அசோக் செல்வன், மேகா ஆகாஷ் காதல் கொஞ்சம் ஸ்பெஷல்.
லியோன் ஜேம்ஸின் பின்னணி இசை படத்தை தாங்கி பிடிக்கிறது. ஆனால், பாடல்கள் கவனம் பெறவில்லை. பாலசுப்பிரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஆகியோரின் ஒளிப்பதிவு கலர்புல். என்னதான் காதலை காமெடியாகவும், சீரியசாகவும் சொன்னாலும் பெண்கள் பக்க நியாயத்தை படம் பேசவில்லை. முன்பு அண்ணா என்று சொல்லி காதலை புறக்கணித்தவர் பின்பு அவன் டாக்டர் என்று சொன்னதும் காதல் பார்வை வீசுவது, காதலிப்பவனை விட நன்றாக படிப்பவன் கிடைத்ததும் காதலை கைவிடுவது என பெண்களை மட்டுமே குற்றப்படுத்துகிறது. அதற்கேற்ற வசனங்கள்தான் படம் முழுக்க இருக்கிறது. பள்ளி காலத்திலேயே சக மாணவிகளை ‘பிகர்’ என்று குறிப்பிடுவது உறுத்தலானது. இப்படியான குறைகள் இருந்தாலும் சபா நாயகனை இளைஞர்களுக்கு பிடிக்கும்.