ஐதராபாத்: யஷ் நடிப்பில் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘கே.ஜி.எஃப் 1’, ‘கே.ஜி.எஃப் 2’ ஆகிய படங்களுக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கியுள்ள பான் இந்தியா படம், ‘சலார்’. இதில் பிரபாஸ், பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதிஹாசன், ஸ்ரேயா ரெட்டி, ஜெகபதி பாபு நடித்துள்ளனர். ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது. 2 நண்பர்கள் பற்றிய கதை கொண்ட இப்படம், வரும் 22ம் தேதி திரைக்கு வருகிறது. சென்சார் போர்டு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது ஏன் என்பது குறித்து தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘நாங்கள் எங்களுடைய அதீத நம்பிக்கையின் அடிப்படையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தோம். கடந்த பல வருடங்களாக இந்த முறையில்தான் எங்கள் தேதிகளை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம். எதிர்காலத்திலும் ஜோதிட அடிப்படையிலேயே நாங்கள் ரிலீஸ் தேதியை அறிவிப்போம். அந்த அடிப்படையில்தான் ‘சலார்’ படத்தின் ரிலீஸ் தேதியை டிசம்பர் 22 என்று அறிவித்தோம்’ என்றார்.