ஐதராபாத்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரலை AI மூலம் பயன்படுத்திய தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் எஸ்.பி.பி.சரண். எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார். இந்நிலையில் தெலுங்கில் தற்போது உருவாகி வரும் கீடா கோலா என்ற படத்தில் எஸ்.பி.பியின் குரலை AI தொழில்நுட்பத்தில் பயன்படுத்தி பாடல் ஒன்றை இசையமைப்பாளர் விவேக் சாகர் உருவாக்கியுள்ளார். இதைக் கேள்விப்பட்டு, எஸ்பிபியின் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். இதற்காக அவர்களிடம் எந்த அனுமதியும் விவேக் சாகரோ, கீடா கோலா பட தயாரிப்பாளர்களோ பெறவில்லையாம்.
இதையடுத்து கீடா கோலாவின் தயாரிப்பாளர்களுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார். மற்றும் திரைப்படத்தின் இசையமைப்பாளர் விவேக் சாகருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலை நெறிமுறையற்ற மற்றும் சட்டவிரோதமாக பயன்படுத்தியதற்காக, மன்னிப்பு, நஷ்டஈடு மற்றும் ராயல்டியில் பங்கு ஆகியவற்றைக் கோரி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டது என சரணின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.