சென்னை: ‘செத்தும் ஆயிரம் பொன்’ ஆனந்த் ரவிச்சந்திரன் எழுதி இயக்கியுள்ள படம், ‘டியர்’. ஆங்கிலத்தில் ‘DeAr’. இதற்கு அர்த்தம் தீபிகா, அர்ஜூன். அர்ஜூன் என்ற கணவன் வேடத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், தீபிகா என்ற மனைவி வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். மற்றும் இளவரசு, காளி வெங்கட், தலைவாசல் விஜய், நந்தினி, அப்துல் லீ, ரோகிணி, கீதா கைலாசம் நடித்துள்ளனர். வரும் 11ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தை நட்மெக் புரொடக்ஷன்ஸ் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி, ஜி.பிருத்விராஜ் இணைந்து தயாரித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடுகிறது. ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், ‘இப்படம் என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது. இப்படத்தின் தூண் ஜி.வி.பிரகாஷ் குமார். அவர் எனக்கு நல்ல நண்பர். எனக்காக இயக்குனரிடம் கதை கேட்டு நடித்த அவருக்கு நன்றி’ என்றார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் கூறும்போது, ‘நானும், ஐஸ்வர்யா ராஜேஷும் பிளைட்டில் வரும்போது, ‘டியர்’ படத்தின் கதையை இயக்குனரிடம் கேட்கும்படி சிபாரிசு செய்தார். ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட படத்தில் மட்டுமே நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் சொல்வதால், இப்படத்தில் எனக்கு என்ன ரோல் இருக்கும் என்று தயங்கினேன். ஆனால், கதை கேட்ட பிறகு என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன். உடனே நடிக்க சம்மதித்தேன்’ என்றார்.