பாலிவுட்டில் பல நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் பரவியுள்ள நிலையில், அங்கு பல வாரிசு நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. முன்னாள் உலக அழகியும், நடிகையுமான பிரியங்கா சோப்ரா கூட பாலிவுட்டில் இருந்து தன்னை விரட்டியடித்து விட்டனர் என்று குமுறியிருந்தார். வாரிசு நட்சத்திரங்களின் ஆதிக்கத்தால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டதாக கங்கனா ரனவத் குற்றம் சாட்டினார்.
தற்போது டாப்ஸி பாலிவுட்டிலுள்ள பாகுபாடுகள் குறித்து மனம் கொதித்துள்ளார். அவர் கூறுகையில், ‘இந்தியில் நடிகர், நடிகைகளை பாரபட்சமாக நடத்துவது புதிய விஷயம் இல்லை. இங்கு வேண்டியவர், வேண்டாதவர் என்று பிரித்துப் பார்க்கும் நிலமை இருக்கிறது. சினிமாவில் நான் நடிக்க வருவதற்கு முன்பே இவ்விஷயம் எனக்கு தெரியும். தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே நடிக்க வாய்ப்பு கொடுப்பார்கள். சாதகமான நிலமை இல்லை என்றாலும் கூட, தொடர்ந்து சினிமாவில் நீடிக்க வேண்டும் என்று நினைப்பது அவரவர் விருப்பம். ஆனால், விஸ்வரூபம் எடுத்து வளர்ந்துவிட்டால் யாரும் அவரை வெளியேற்ற முடியாது’ என்றார்.