சென்னை: ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ராஜேந்திரன் கதை எழுதி தயாரித்துள்ள படம், ‘பனை’. நலிந்து வரும் பனைமரத் தொழில் மற்றும் அத்தொழிலாளர்களைப் பற்றி இப்படம் பேசுகிறது. ஆதி பி.ஆறுமுகம் இயக்க, வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். எம்.எம்.கீரவாணியிடம் பணியாற்றிய மீராலால் தமிழில் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.
சிவகுமார் ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹரீஷ் பிரபாகரன், மேக்னா, வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு, டி.எஸ்.ஆர், ஜி.பி.முத்து, எம்.ராஜேந்திரன் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வைரமுத்து தலைமையில் நடந்தது. தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பேரரசு, ஆர்.அரவிந்தராஜ், கவிஞர் சொற்கோ உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வைரமுத்து பேசும்போது, ‘பனை என்பது இந்தப் படத்தின் பெயர் அல்ல. நம் மண்ணின் பெயர். ஒரு படத்துக்கு தலைப்பு என்பது மிக மிக அவசியம். இப்போது வருகிற தமிழ்ப் படங்களின் தலைப்புகளைப் பார்க்கும்போது நான் துக்கப்படுகிறேன். தமிழில் சொற்களுக்கா பஞ்சம்? தமிழில் தலைப்புகளுக்கா பஞ்சம்? அதனால் தமிழில் தலைப்பு வையுங்கள்’ என்றார்.