சென்னை: தெலுங்கு முன்னணி நடிகர் சம்பூர்ணேஷ் பாபு, ‘ஸ்பூப்’ வகை படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தற்போது ‘தங்கமுட்டை’ என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். நியூ நார்மல் பிலிம் பேக்டரி சார்பில் கே.எம்.இளஞ்செழியன், ஜியோ ஸ்டார் எண்டர்பிரைசஸ் சார்பில் எம்.கோடீஸ்வரர் ராஜு தயாரித்துள்ளனர். தெலுங்கிலும் தயாராகியுள்ள இதற்கு ‘பங்காரு குட்டு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. முக்கிய வேடங்களில் ரோபோ சங்கர், சுரபி சுக்லா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சரண்ராஜ், துவாசி மோகன், சுரேகா வாணி நடித்துள்ளனர். ஒரு பாடல் காட்சியில் கிரண் நடனம் ஆடியுள்ளார். சமீர் டாண்டன் இசை அமைக்க, அகில் சசிதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கியுள்ளார்.
படம் குறித்து அவர் கூறியதாவது: சம்பூர்ணேஷ் பாபு தெலுங்கில் காமெடியனாக நடித்தாலும், இப்படத்தில் காமெடியுடன் சீரியஸ் கலந்து நடித்துள்ளார். படத்தில் அவர் அதிர்ஷ்டம் இல்லாத, திருடவே தெரியாத திருடனாக நடித்துள்ளார். திடீரென்று அவருக்கு ஒரு தங்கமுட்டை கிடைத்தால் எப்படி இருக்கும் என்பது ஒன்லைன். தங்கமுட்டை என்பது நிஜத்தில் வேறொன்று. படத்தில் சஸ்பென்ஸ் அம்சமாக இருக்கிறது. இருமொழி படம் என்பதால் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா எல்லையில் படமாக்கியுள்ளோம். காமெடி படமாக இருந்தாலும் கூட, முக்கியமான ஒரு மெசேஜையும் சொல்லியிருக்கிறோம்.