சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களில் நடித்து வருகிறார், சமந்தா. மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், வெளிநாடு சென்று தீவிர சிகிச்சை பெற்றார். தற்போது ஓரளவு உடல்நிலை தேறியுள்ள அவர், சினிமாவில் நடிக்க சற்று இடைவெளி விட்டிருந்ததை மறுபரிசீலனை செய்து, தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில், தனது உடல்நிலை பாதிப்புகள் குறித்து வெளிப்படையாகப் பேசியதற்கான காரணத்தை மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமந்தா கூறியதாவது: திடீரென்று மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டதை நான் வெளியே சொல்லியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது நான் ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட ஒரு படத்தில் நடித்திருந்தேன். அது ரிலீசாக வேண்டிய நேரத்தில்தான் என்னை இந்நோய் வாட்டியது.
படத்தின் வெற்றிக்கான புரமோஷனுக்கு வர வேண்டும் என்று தயாரிப்பாளர் கேட்டார். அதனால் ஒரே ஒரு பேட்டிக்கு மட்டும் சம்மதித்தேன். அதிகமான மருந்துகளையும், மாத்திரைகளையும் சாப்பிட்டதால், எனது தோற்றம் நார்மலாக இல்லை என்பதை உணர்ந்தேன். எனவே, மயோசிடிஸ் நோயால் நான் பாதிக்கப்பட்ட விஷயத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அப்போது சிலர், என்மீது இரக்கம் வருவதற்காகவே இந்த விஷயத்தை நான் வெளியே சொன்னேன் என்று கடுமையாக விமர்சித்தனர். ஒரு நடிகையாக நன்கு வளர்ச்சி அடைந்துள்ளேன். எனது ஆரம்பகாலத்தில் என்னைப் பற்றி தவறாகப் பேசுவதையும், எழுதுவதையும் எங்கே, எங்கே என்று தேடுவேன். பிறகு அதிலிருந்து சில விஷயங்களை நான் மாற்றிக்கொள்வேன். கஷ்டப்படும்போது அதை வெளிப்படுத்த ஒரு வடிகால் தேவை. எனவே, சோஷியல் மீடியாதான் சிறந்த போர்டல் என்று நினைக்கிறேன்.