சென்னை: ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ரஜினிகாந்த் பேசினார். அப்போது காக்கா, கழுகு கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர் கூறினார். இது குறித்து அவர் பேசியதாவது: தற்போது விஜய்க்கும் எனக்கும் போட்டி என கூறுவது மிகவும் வேதனை அளிக்கிறது. நடிகர் விஜய் எனக்கு முன்னாள் வளர்ந்த பையன். அவரை சின்ன வயதிலிருந்தே பார்த்து வருகிறேன். ‘தர்மத்தின் தலைவன்’ படப்பிடிப்பின் போது விஜய்யின் தந்தை என்னிடம் வந்து, என்னுடைய பையன் படித்து வருகிறான், அவனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது. அவன் படித்துவிட்டு வந்தவுடன் நடிக்கலாம் என என்னை சொல்லும்படி சொன்னார். அதன் பிறகு விஜய் நடிப்பிற்கு வந்து, தனது திறமையால், உழைப்பால் உயர்ந்து உள்ளார். நன்றாக நடித்து வருகிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
விஜய்க்கும், எனக்கும் போட்டி என கூறுவது மிகவும் கவலை அளிக்கிறது. அவரும் மேடையில் ‘எனக்கு போட்டி நான் தான்’ என கூறியுள்ளார். நானும் அதையே தான் சொல்கிறேன். அதனால் நடிகர் விஜய், எனக்கு போட்டி என நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை. நானும் விஜய்க்கு போட்டி என நினைத்தால் அது அவருக்கும் மரியாதை இல்லை. தயவுசெய்து என்னுடைய மற்றும் அவருடைய ரசிகர்கள், ‘காக்கா, கழுகு’ கதையை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இது எனது அன்பார்ந்த வேண்டுகோள். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார். படத்தின் இயக்குனரும் ரஜினி மகளுமான ஐஸ்வர்யா, விஷ்ணு விஷால், விக்ராந்த், ஏ.ஆர்.ரஹ்மான், லைக்கா தமிழ்குமரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.