சென்னை: கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரீது வர்மா, பார்த்திபன், ராதிகா, விநாயகன், சிம்ரன் நடித்துள்ள படம், ‘துருவ நட்சத்திரம்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். நாளை திரைக்கு வரும் இப்படம் குறித்து கவுதம் வாசுதேவ் மேனன் நிருபர்களிடம் கூறியதாவது: சூர்யாவுக்காக நான் உருவாக்கிய ஸ்பை திரில்லர் கதை கொண்ட படம் இது. சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. பிறகு ரஜினிகாந்திடம் கதை சொன்னேன். அவருக்குப் பிடித்திருந்தும் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. பிறகு இக்கதைக்குள் விக்ரம் வந்தவுடன் நிறைய மாற்றங்கள் செய்தேன். சூர்யாவுக்காக எழுதிய கதையில் உணர்வுப்பூர்வமான பிளாஷ்பேக் இருந்தது. 20 வயது பையன் சம்பந்தப்பட்ட அந்த விஷயத்தை விக்ரமுக்காக நீக்கிவிட்டேன். மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவம் நடந்து 15 வருடங்களாகி விட்டது.
இப்படத்தின் கதை 15வது வருடத்தில் நடக்கிறது. இது அடுத்தடுத்த பாகங்களைக் கொண்ட படம். முதல் பாகமான இதன் முடிவில் எதிர்பாராத டிவிஸ்ட் இருக்கும். இதையடுத்து அடுத்தடுத்த பாகங்கள் உருவாகும். அதில் வேறொரு வில்லன், வேறொரு ஹீரோ வரக்கூடும். படம் வெற்றி பெற்றாலும், பெறாவிட்டாலும் இக்கதையை தொடர்ச்சியாக இயக்குவேன். துருவ நட்சத்திரத்தை ஸ்பெஷல் ஸ்டார் என்று சொல்வோம். படத்தில் விக்ரம் பெயர், துருவ். அவரது பின்னணியில் கதை நடப்பதால் துருவ நட்சத்திரம் என்று தலைப்பு சூட்டினேன். இஸ்தான்புல், பல்கேரியா, ஜார்ஜியா, நியூயார்க், துருக்கி, அபுதாபி உள்பட பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. டெக்னிக்கலாக இப்படம் நீண்ட நாட்களுக்குப் பேசப்படும்.