சென்னை: ‘அருவி’ படத்தில் சிறப்பாக நடித்தவர், அதிதி பாலன். பிறகு தெலுங்கிலும், மலையாளத்திலும் நடித்த அவர், மீண்டும் தமிழில் நடித்துள்ள படம், ‘கருமேகங்கள் கலைகின்றன’. தங்கர்பச்சான் எழுதி இயக்கியுள்ளார். பாரதிராஜா, கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு நடித்துள்ளனர். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இப்படம் குறித்து அதிதி பாலன் கூறியதாவது: இப்படத்தில் நடித்தது உண்மையிலேயே எனக்கு மறக்க முடியாத அனுபவம்.
பாரதிராஜா, தங்கர்பச்சான் ஆகியோரிடம் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். குடும்பம் மற்றும் மனிதர்களின் உணர்வுகளை வைத்து உருவான இப்படத்தில், ஒரு பெண்ணுக்கும், குழந்தைக்கும் இருக்கும் உறவைப் பற்றி தங்கர்பச்சான் சொல்லியிருக்கிறார். நடிப்பிலுள்ள நுணுக்கங்களை பாரதிராஜா சொல்லிக்கொடுத்தார். ‘அழகி’ தனலட்சுமி நந்திதாதாஸ் மாதிரி, ‘கருமேகங்கள் கலைகின்றன’ கண்மணி கதாபாத்திரம் காலம் கடந்தும் வாழும். பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டு, பிறகு ஒரு பொறுப்பு கிடைக்கும்போது, அதை ஒரு பெண் எவ்வாறு கையாள்கிறார் என்பது எனது கதாபாத்திரம்.
காவல்துறை அதிகாரியாக இருந்து, அதிலிருந்து விலகி மீண்டு வர நினைக்கிறாள் கண்மணி. பாரதிராஜாவின் கதாபாத்திரத்துக்கும், தலைப்புக்கும் சம்பந்தம் இருக்கிறது. அவரது பயணத்தை வைத்து படம் தொடங்கி முடியும். அவர் நீதிபதியாகவும், கவுதம் வாசுதேவ் மேனன் வழக்கறிஞராகவும், யோகி பாபு ஒரு குழந்தை மீது அதிக அன்பு செலுத்துபவராகவும் நடித்துள்ளனர். தமிழில் அதிக படங்களில் நடிக்காதது ஏன் என்று கேட்கிறார்கள். அதற்கான காரணம் எனக்கும் தெரியவில்லை.