ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய் மூவரும் உடன்பிறந்த சகோதரர்கள். அவர்களது ஒரே சகோதரி, திவ்யதர்ஷினி. ஸ்ரீகாந்துக்கு மனைவி சம்யுக்தா சண்முகநாதன், ஒரு மகள் இருக்கின்றனர். திடீரென்று மனைவி மீது சலிப்பு ஏற்பட்டதால், ரைசா வில்சனுடன் ஸ்ரீகாந்த் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். ஜீவா பெங்களூருவில் ஐஸ்வர்யா தத்தாவுடன் லிவிங் டூகெதராக வாழ்கிறார். திடீரென்று அவருடன் பிரேக்அப் ஆகி, ஊட்டியிலுள்ள தன் வீட்டுக்கு வருகிறார். ஜெய் தனது தோழி அமிர்தா அய்யருடன் நட்பில் இருக்கிறார். அது காதலாக மாறும் நேரத்தில், திடீரென்று ஜெய்க்கு மாளவிகா சர்மாவுடன் நிச்சயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், ஸ்ரீகாந்துடன் தொடர்பில் இருக்கும் ரைசா வில்சனுக்கும், ஜீவாவுக்கும் திருமணம் நிச்சயிக்க ஏற்பாடுகள் நடக்கிறது. வெளியூருக்கு சென்றிருந்த அமிர்தா அய்யர், தன் வருங்கால கணவருடன் ஊர் திரும்புகிறார். இந்த இடியாப்பச் சிக்கல்களை எப்படி தீர்த்து வைத்து சுபம் போடுகிறார்கள் என்பது கிளைமாக்ஸ். நிறைய நட்சத்திரங்கள், பல கிளைக்கதைகள், கலர்ஃபுல் நடனக் காட்சிகள், விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமெடி என்று, இயக்குனர் சுந்தர்.சி தனது வழக்கமான பாணியில் கொடுத்துள்ள படம் இது. காதல், காதல் முறிவு, அடுத்த காதல், அதில் சில பிரச்னை என்று, ஒரே ஏரியாவுக்குள் கதை சுற்றுவதால் அயர்ச்சி ஏற்படுகிறது. யோகி பாபுவும், ரெடின் கிங்ஸ்லியும் இணைந்து படத்தை கலகலப்பாக வைத்திருக்கின்றனர். ஜீவா ஒருவரைக் காதலிக்கிறார். பிறகு தன் வளர்ச்சிக்காக இன்னொருவரை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். ஜீவாவின் தம்பி ஜெய்க்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணைக் காதலிக்கிறார், பின்பு விலகுகிறார், பிறகு சேருகிறார். அமிர்தா அய்யர் திடீரென்று ஒருவரை தன் வருங்கால கணவர் என்று அழைத்து வருகிறார். திடீரென்று ஜெய்யைக் கட்டிப்பிடித்துக் கொள்கிறார். இப்படி திரைக்கதையில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டாலும், படத்தை கடைசிவரை கலகலப்பாக கொண்டு சென்றுள்ளார், சுந்தர்.சி. இது காமெடி படம் என்பதால், யுவன் சங்கர் ராஜா அதிகமாக சிரமப்படவில்லை. படத்தின் கதை முழுவதும் ஊட்டியிலேயே நடப்பதால், கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவில் பசுமை பளிச்சிடுகிறது. கேள்வி கேட்காமல், லாஜிக் பார்க்காமல் இருந்தாலும், இரண்டரை மணி நேரம் டைம் பாசாவது கடினம்தான்.
30