தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி தேர்தல் நடந்தது. ஆனால், வாக்குகளை எண்ண கோர்ட் தடை விதித்தது. இதற்கிடையே நடிகர் சங்கத்தை நிர்வகிக்க, தனி அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமித்தது. இந்நிலையில், தேர்தலை எதிர்த்து சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தனி நீதிபதி கல்யாணசுந்தரம், தேர்தலை ரத்து செய்துவிட்டு மறுதேர்தல் நடத்த உத்தரவிட்டு, தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாசை நியமித்தார். மேலும், 3 மாதத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்தும், தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்தும் விஷால் தரப்பினர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இது நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், அப்துல் குத்தூஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேர்தலை நடத்த உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.இந்நிலையில் நேற்று கே.பாக்யராஜ், ஐசரி கணேஷ் இருவரும் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தேர்தல் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்ய மாட்டோம். நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை கேட்போம். ஏற்கனவே நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணினாலும் சரி, புதிய தேர்தல் நடந்தாலும் சரி, எங்களுக்கு இரண்டும் ஒன்றுதான்’ என்றனர்.
நடிகர் சங்க தேர்தலுக்கு கோர்ட் தடை; மேல்முறையீடு செய்ய மாட்டோம்; பாக்யராஜ் அணி அறிவிப்பு
70