‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்களுக்குப் பிறகு தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் தனுஷ் நடித்துள்ள படம் இது. செல்வராகவன் கடைசியாக இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பாணியிலான பேய் திரில்லர் படம். மலைக்கிராமம் ஒன்றில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகள் கதிர், பிரபு. (இருவரும் தனுஷ்). இதில் மூத்தவர் கதிர் முரட்டு சுபாவமும், கெட்ட குணமும் கொண்டவர். இளையவர் பிரபு நல்ல மனம் கொண்டவர். தன்னைக் கண்டிக்கும் அப்பா சரவண சுப்பையாவைக் கொலை செய்யும் கதிரை, திருவிழாவில் வேண்டுமென்றே தனியாக விட்டுவிட்டுச் செல்கிறார் அம்மா. 20 வருடங்களுக்குப் பிறகு பிரபு என்ஜினீயராகவும், கதிர் கொடூர கொலைகாரனாகவும் மாறியிருக்கின்றனர். கதிர் தன்னைப் பற்றிய ரகசியங்களை அறிந்த மனைவி எல்லி அவ்ரமையும், ஒரு மகனையும் கொடூரமான முறையில் கொல்கிறார். கொல்லப்பட்ட மகனின் ஆவி, பிரபு பெயர் கொண்ட தனுஷின் மகள் ஹியா தவேவுக்குள் புகுந்து, தனது தந்தையைக் கொல்லும்படி பிரபுவுக்கு கட்டளையிடுகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. வழக்கமான பேய்க்கதையில் இரட்டையர்கள், ஒருவர் இன்னொருவரைக் கொல்ல வேண்டும் என்ற புதிய விஷயத்தைச் சேர்த்துக் கொடுத்துள்ளார், இயக்குனர் செல்வராகவன். அப்படியே ஒரு சின்ன கேரக்டரிலும் வந்துவிட்டு செல்கிறார். புதுமையான பேய்க்கதையைக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்த அவர், அதை ஓரளவுக்குக் காப்பாற்றிவிடுகிறார். கதை எப்படி இருந்தாலும், தனுஷின் நடிப்புப் பசிக்கு செம தீனி போட்டுள்ளார் செல்வராகவன். மகள் மீது தீராத அன்பு கொண்ட தந்தை, மகனையே கொல்லும் கொடூர மனம் கொண்ட அரக்கன் என்று, இரண்டு முகங்களை அட்டகாசமாகப் பதிவு செய்துள்ளார். பிரபு-தனுஷின் மனைவியாக வரும் இந்துஜா, கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார். தனுஷின் மகளாக நடித்துள்ள ஹியா தவேயின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. பயம் கலந்த கண்களும், துடிக்கும் உதடுகளும் கண்களை விட்டு அகல மறுக்கிறது. பிரபு-தனுஷின் நண்பராக வந்துவிட்டுச் செல்கிறார், யோகி பாபு. மனநல மருத்துவர் வேடத்தில் பிரபு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். படத்தைப் பெருமளவு தூக்கி நிறுத்துவது ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும், யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும்தான். சாதாரண காட்சிகளைக்கூட திக்… திக் என்ற இசையால் திடுக்கிட வைத்துள்ளார், யுவன் சங்கர் ராஜா. வடநாட்டின் மலை மற்றும் ஏரி அழகையும், அங்கு நடக்கும் கொடூரத்தையும் வித்தியாசமாகப் பதிவு செய்துள்ளார், ஓம் பிரகாஷ். வில்லன் தனுஷ் எத்தனை கொலைகள் செய்தாலும் அது போலீசுக்குத் தெரியாமல் இருப்பதும், இன்னொரு உடலுக்குள் புகுந்துகொள்ளும் ஆற்றல் மிகுந்த ஆவியால், தன் தந்தையைக் கொல்ல முடியாமல் போவதும் லாஜிக் மீறல்கள்.
26