சென்னை: 36 வருடங்களுக்கு மேலாக நடன இயக்குனராக பணியாற்றி வருகிறவர் பிருந்தா. 2 ஆயிரம் பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளார். துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதிராவ் நடித்த ‘ஹே சினாமிகா’என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். தற்போது அவர் இயக்கி உள்ள படம் ‘தக்ஸ்’. இதில் ரிது ஹாரூன், அனஸ்வரா ராஜன் என்ற புதுமுகங்களுடன் பாபி சிம்ஹா, அம்பானி சரத், முனீஸ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். படம் குறித்து பிருந்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியதாவது: சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ஆயுதகும்பலை தூத்துக்குடி பகுதியில் தக்ஸ் என்று சொல்வார்கள். அந்த தக்ஸ்கள் பற்றிய கதை இது. பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சிறையில் அடைக்கப்படும் இளைஞர்கள் இன்னொரு தரமான சம்பவத்திற்காக சிறையில் இருந்து தப்பித்து எப்படி தக்ஸ்களாக மாறுகிறார்கள் என்கிற கதை. நாகர்கோவில், தூத்துக்குடி பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. 50 சதவிகித காட்சிகள் சிறைக்குள் நடக்கும்.நடன இயக்குனராக பலரை கட்டுப்படுத்தும் மனபக்குவம் இருந்ததால் என்னால் படம் இயக்க முடிகிறது. கூடவே நான் கண்டிப்பான இயக்குனராகவும் இருக்கிறேன். பெண் இயக்குனர் என்றால் மென்மையான படங்கள்தான் இயக்க வேண்டும் என்பதில்லை. எல்லா விதமான கதைகளையும் இயக்க முடியும். அதனை ஏற்கெனவே சுதா கொங்கரா மாதிரியான இயக்குனர்கள் நிரூபித்திருக்கிறார்கள். நான் என் பங்கிற்கு செய்திருக்கிறேன். நான் நடன இயக்குனராக அறிமுகமானபோது ஆண்கள் நிறைந்த சினிமாவாக இருந்தது. அதனால் மற்றவர்களிடம் என்னை கடுமையானவளாக காட்டிக் கொள்ள வேண்டியது இருந்தது. காலப்போக்கில் அதுவே அடையாளமானது. பெண் இயக்குனர்களுக்கு கொஞ்சம் கூடுதலான துணிச்சல் இருந்தால் போதும். சினிமாவில் நினைத்ததை சாதிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
பெண் இயக்குனர்களுக்கு துணிச்சல் வேண்டும்: இயக்குனர் பிருந்தா
0 comment
36