ஐதராபாத்: ராஜமவுலி இயக்கும் படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்க உள்ளார். ஆர்ஆர்ஆர் படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்த படத்தை வெளியாகாத சில நாடுகளில் வெளியிட்டு, அங்குள்ள ரசிகர்களை ராஜமவுலி சந்தித்து வருகிறார். இதற்கிடையே தனது அடுத்த படத்துக்கான வேலைகளையும் அவர் ஆரம்பித்துள்ளார். அவர் இயக்க உள்ள அடுத்த படமும் பான் இந்தியா படமாக உருவாகிறது. இந்த படத்துக்கு ராஜமவுலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் கதை எழுதி முடித்துவிட்டார். இதையடுத்து வெளிநாடுகளுக்கு ராஜமவுலி சென்றிருந்தாலும் இந்த பட வேலைகளையும் அவர் ஆரம்பித்துள்ளார். இது ‘இண்டியானா ஜோன்ஸ்’ போல ஆக்ஷன் அட்வென்சர் படம் என்றும் உலகம் முழுவதும் படமாக்கப்பட இருப்பதாகவும் சமீபத்தில் தெரிவித்திருந்தார் ராஜமவுலி. இதனால் அதற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் நாயகியாக தீபிகா படுகோன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தீபிகா, தமிழில் ரஜினியின் கோச்சடையான் படத்தில் நடித்தார். கன்னடத்தில் ஐஸ்வர்யா என்ற படத்தில் நடித்தார். இப்போது தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக நாக் அஸ்வின் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அதிக சம்பளம் பேசப்படுவதால் ராஜமவுலி படத்திலும் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிக்க அவர் சம்மதிப்பார் என கூறப்படுகிறது.
34