எழுத்தாளர் பாரதிராஜா, லண்டனில் குடும்பத்துடன் செட்டிலான தனது மகன் அழைத்ததை தொடர்ந்து, தன் மனைவி மவுனிகாவுடன் அங்கு செல்கிறார். திடீரென்று மவுனிகா இறந்த பிறகு தனிமையில் வாடுகிறார். அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறார் மகன். ஆனால், அங்கு இருக்க பிடிக்காமல் வெளியேறுகிறார் பாரதிராஜா. அடுத்து என்ன செய்வது என்று அவர் தவிக்கும்போது, தற்கொலைக்கு முயற்சிக்கும் ராசி நட்சத்திராவை சந்திக்கிறார். தனது அக்கா கணவனின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் அவர் தற்கொலைக்கு முயற்சித்ததை அறிந்த பாரதிராஜா, ‘எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது. இந்த உலகம் அழகானது. அதை வாழ்ந்து ரசிக்க வேண்டும். என்னுடன் 10 நாட்கள் பயணப்படு. அந்த வாழ்க்கையை உனக்கு புரிய வைக்கிறேன். அதற்கு பிறகும் இந்த உலகில் வாழப் பிடிக்கவில்லை என்றால், நானே உன்னை சுட்டுக் கொல்கிறேன்’ என்கிறார். இந்த பயணத்தின் முடிவு என்ன என்பது மீதி கதை. வாழ்வின் தொடக்கப்புள்ளியில் நிற்கும் இளம் பெண்ணுக்கும், முற்றுப்புள்ளியை நெருங்கி வரும் முதியவருக்குமான நட்பையும், மெல்லிய நேசத்தையும் கவிதை மாதிரி சொல்ல நினைத்திருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா. கவிதை அழகாக இருந்தாலும், அதை எழுதியவர் அந்தக்கால பாரதிராஜா இல்ைல. திரைக்கதையில் தடுமாற்றம், நிறைய குழப்பம், ஒரேமாதிரியான காட்சிகள் எல்லாம், ‘பாரதிராஜாவுக்கு என்ன ஆயிற்று?’ என்று ஆதங்கத்துடன் கேட்க தோன்றுகிறது. படம் முழுக்க இருவர் மட்டுமே வரும்போது, ஒவ்வொரு காட்சியும் எவ்வளவு சுவாரஸ்யமாக இருந்திருக்க வேண்டும்? ஒவ்வொரு இடமாக செல்கிறார்கள், போட்டோ எடுக்கிறார்கள், சாப்பிடுகிறார்கள். இதில் அவர் எங்கே அந்த பெண்ணுக்கு வாழ்க்கையை பற்றி கற்றுக்கொடுக்கிறார்? நடிப்பு விஷயத்தில் பாரதிராஜாவும், ராசி நட்சத்திராவும் போட்டி போட்டு நடித்துள்ளனர். பாரதிராஜாவின் அன்பிலும், அரவணைப்பிலும் தவித்து, பிறகு அதை காதலாக மாற்றி தடுமாறும் காட்சிகளில் ராசி நட்சத்திரா கவனிக்க வைக்கிறார். மனைவி இறந்த துக்கம் தாளாமல் துவண்டு விழுவது, மகனின் துரோகத்தை நினைத்து கலங்குவது, ராசி நட்சத்திராவிடம் ெமாத்த அன்பையும் இறக்கி வைப்பது என்று, பாரதிராஜா தனது நீண்ட கால திரை அனுபவத்தை நடிப்பாக வழங்கியுள்ளார். லண்டன் மற்றும் ஸ்காட்லாந்தை நன்றாக சுற்றிக் காட்டியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் சாலை சகாதேவன். இயற்கை அழகு நிறைந்த இங்கிலாந்தின் அழகை இன்னும் அழகாக காட்டியிருக்கலாம். என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. சபேஷ், முரளியின் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. மொத்தத்தில் மீண்டும் மரியாதை பெறுவது, ‘நடிகர்’ பாரதிராஜா மட்டுமே.
47