பசங்க படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பாண்டி. அதன்பிறகு சில படங்களில் விடலை பையனாக நடித்தார். என் ஆளோட செருப்ப காணோம் படத்தில் கதை நாயகனாக நடித்தார். அதன் பிறகு சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்த பசங்க பாண்டி தற்போது கம்பெனி என்ற படத்தில் மீண்டும் கதை நாயகனாக நடித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பேருந்துகளின் முழு வடிவமைப்பு (பஸ் பாடி பில்டிங்) தொழிற்சாலை ஒன்றில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை செ.தங்கராஜன் இயக்க, ஸ்ரீ மகானந்தா சினிமாஸ் சார்பில் ஆர்.முருகேசன் தயாரித்திருக்கிறார்.அறிமுக நடிகர் முருகேசன் கதையின் இன்னொரு நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக ‘கன்னி மாடம்’ படத்தில் நடித்த வளினா மற்றும் ‘திரெளதி’ படத்தில் நடித்த காயத்ரி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் தங்கராஜ் கூறும்போது “பஸ்களை முழுமையாக வடிவமைக்கும் தொழிற்சாலையில் வேலை செய்யும் நண்பர்களான நான்கு இளைஞர்கள், ஒரு லட்சியத்தோடு பயணிக்கிறார்கள். அவர்களுடைய அந்த லட்சிய பயணத்தில் வரும் பிரச்சனைகளும், அவர்கள் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள், என்பது தான் படத்தின் கதை” என்றார்.
25