ஐதராபாத்: புஷ்பா படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றி பெற்றதால், இரண்டாம் பாகத்துக்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளார் இயக்குனர் சுகுமார். தெலுங்கில் ராம்சரண், சமந்தா நடித்த ரங்கஸ்தலம் படத்தை இயக்கியவர் சுகுமார். இந்த படத்துக்கு பிறகு புஷ்பா படத்தை அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்கினார். ரங்கஸ்தலம் பெரிய வெற்றி பெற்றதால், புஷ்பா படத்துக்கு ரூ.20 கோடி சம்பளமாக பெற்றார் சுகுமார். இந்நிலையில் புஷ்பா படம் பான் இந்தியா படமாக வெளியாகி, பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் ஆகின. படமும் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீசில் சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என புஷ்பா முதல் பாகம் வெளியாவதற்கு முன்பே அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் பாகம் ஹிட்டானால், சுகுமாருக்கும் மற்ற டெக்னீஷியன்களுக்கும் சம்பளம் உயர்த்தப்படும் என தயாரிப்பாளர் தரப்பில் உறுதி தரப்பட்டது. இப்போது வழக்கத்தை விட புஷ்பா முதல் பாகம் அதிக லாபம் சம்பாதித்ததால், சுகுமாருக்கு ரூ.20 கோடியிலிருந்து ரூ.50 கோடியாக சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், படத்தில் பணியாற்றிய மற்ற டெக்னீஷியன்களுக்கும் 20 சதவீதம் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன் முதல் பாகத்தில் நடிக்க ரூ.50 கோடி சம்பளம் வாங்கினார். இரண்டாவது பாகத்துக்கு ரூ.100 கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. இரண்டாம் பாகத்துக்கான பூஜை நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடைபெற்றது. படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது.
முதல் பாகம் வெற்றி பெற்றதால் சம்பளத்தை உயர்த்திய புஷ்பா இயக்குனர்
0 comment
31