சென்னை: மலையாளத்தில் 1989ல் மம்மூட்டியை வைத்து படம் தயாரித்து நஷ்டமடைந்த தயாரிப்பாளர் சி.டி.ராஜன் தனது சொத்துகளை இழந்தார். 34 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகன்கள் அதே மம்மூட்டியை வைத்து பெரும் வெற்றி படம் கொடுத்து, இழந்த சொத்துகளை மீட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் 28ம் தேதி மம்மூட்டி நடிப்பில் வெளியான மலையாள படம் ‘கண்ணூர் ஸ்குவாட்’. இந்தப் படத்தை ராபி வர்கீஸ் ராஜ் இயக்கினார். இவர் வேறு யாருமல்ல, சி.டி.ராஜனின் மகன்தான். ‘கண்ணூர் ஸ்குவாட்’ படம், ரூ.100 கோடி வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு பின்னால் ஒரு கதையே இருக்கிறது.
1989ல் ‘மஹாயானம்’ என்ற படத்தை ஹனி புரொடக்ஷன்ஸ் என்ற தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் சி.டி.ராஜன் தயாரித்திருந்தார். இந்தப்படத்தில் மம்மூட்டி, சீமா, முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் பெரும் தோல்வியை சந்தித்தது. இதில் ராஜனுக்கு பல லட்சங்கள் நஷ்டம் ஏற்பட்டது. சொந்த வீட்டை அடமானம் வைத்துதான் இந்த படத்தை அவர் எடுத்தார். இந்த தோல்வியால், அவர் வீட்டை இழந்துவிட்டார். மேலும் சில சொத்துகளையும் இழந்தார். கடனுக்கு தள்ளப்பட்டார். கொச்சியிலிருந்து பாலக்காட்டுக்கு வாடகை வீட்டுக்கு மாறினார். தனது மகன் ராபி, தன்னைப்போல் சினிமாவுக்கு போகக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்து அவரை இன்ஜினியரிங் படிப்பில் சேர்த்துவிட்டார். அவரும் வேலைக்கு சென்றுகொண்டிருந்தார்.
ஆனால், ரத்தத்தில் சினிமா ஊறி இருந்ததால், தனது வேலையை ராபி வர்கீஸ் ராஜினாமா செய்துவிட்டு, உதவி இயக்குனராக சிலரிடம் வேலை பார்த்தார். பிறகு மம்மூட்டியை சந்தித்து ஒரு கதை கூறினார். அதுதான் ‘கண்ணூர் ஸ்குவாட்’. இந்த கதையை எழுதியது ராபியின் சகோதரர் ரோனி டேவிட் ராஜ். கதை கேட்டு பிரமித்த மம்மூட்டி, இதை தானே தயாரிக்க முன்வந்தார். இப்போது இந்த படத்தின் மாபெரும் வெற்றியால் சம்பளம் தவிர, பெரும் தொகை ஒன்றை மம்மூட்டி, டைரக்டர் ராபி வர்கீஸுக்கு வழங்கியுள்ளார். அதன் மூலம் தங்களது பூர்விக சொத்துகளை ராபி வர்கீஸ் மீட்டு, அப்பா ராஜனை மகிழ்ச்சி கடலில் மூழ்கடிக்க வைத்திருக்கிறார். எந்த சினிமா எல்லாவற்றையும் பறித்ததோ அதே சினிமா இப்போது ராஜனுக்கு எல்லாவற்றையும் திருப்பி கொடுத்துள்ளது. அதுவும் மம்மூட்டியால் இழந்ததை மம்மூட்டியால் மீட்டுள்ளனர்.