சென்னை: பாண்டிய மன்னர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் யாத்திசை படம் வரும் 21ம் தேதி ரிலீசாகிறது. சோழ மன்னர்களின் கதையான பொன்னியின் செல்வன் படத்தின் 2ம் பாகம் வரும் 28ம் தேதி ரிலீசாகிறது. அதற்கு முன்பாக யாத்திசை படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது. இடைக்கால பாண்டிய மன்னனான ரணதீரன் பின்னணியில் யாத்திசை என்ற படத்தை தரணி ராசேந்திரன் இயக்கியிருக்கிறார். புதுமுகங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
தரணி ராசேந்திரன் கூறும்போது, ‘இரண்டு மணி நேரம் ஓடும் இந்த படத்தில் ஒரு மணி நேரம், போர் காட்சிகள் இடம்பெறுகின்றன. இது ஏழாம் நூற்றாண்டில் நடைபெறும் ஒரு புனைவு கதை என்பதால், அப்போது பேசப்பட்ட மொழிக்காக மிகுந்த ஆய்வு செய்து வசனங்களை எழுதியிருக்கிறோம். யாத்திசை படம் வெளியான பிறகு கருத்தியல் ரீதியான விவாதத்தை உருவாக்கும்’ என்றார். யாத்திசை படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அது தற்போது யூடியூப்பில் 80 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.