சென்னை: துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஷபீர், செம்பன் வினோத், சாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்திரன் நடித்து இருக்கும் பான் இந்தியா படம், ‘கிங் ஆஃப் கோதா’. அபிலாஷ் ஜோஷி இயக்க, நிமீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேக்ஸ் பிஜோய், ஷான் ரஹ்மான் இணைந்து இசை அமைத்துள்ளனர். 1980களில் நடைபெறும் கதை கொண்ட இப்படம் சம்பந்தமாக சென்னையில் நிருபர்களிடம் துல்கர் சல்மான் கூறியதாவது:
நடிக்க வருவதற்கு முன்பு, துபாய் கட்டுமான நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றினேன். ஆனால்,சினிமாவின் மீது மட்டுமே எனக்கு அதிகமான ஆர்வம் இருந்தது. உடனே அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, எனது அப்பா மம்மூட்டியின் பாதையில் நடிக்க வந்தேன். எனக்கு அவர் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். இதுவரை நான் நடித்த படங்களில் பிரமாண்டமாக உருவான படம் என்று ‘கிங் ஆஃப் கோதா’ படத்தை சொல்லலாம். இதுவரை நான் ரீமேக் படங்களில் நடித்தது இல்லை.
வெற்றிபெற்ற படங்களை ரீமேக் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. வெற்றிபெற்ற படத்தை அப்படியே விட்டுவிட வேண்டும். அப்பாவின் எந்த படத்தின் ரீமேக்கிலும் நான் நடிக்க மாட்டேன். ரீமிக்ஸ் பாடல்களிலும் எனக்கு உடன்பாடில்லை. ஹிட்டானதை அப்படியே விட்டுவிட்டு, புத்தம் புதிய படைப்புகளை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். தற்போது நான் பின்னணி பாடுவதற்கு இடைவெளி விட்டிருக்கிறேன். நிறைய படங்களில் நடிப்பது கூட அதற்கு காரணம்’ என்றார்.