உலகம் முழுவதும் மே 1ம் தேதியன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தேதியில் பிறந்தவர், அஜித் குமார். ‘ஏ.கே’ என்று நண்பர்கள் வட்டாரத்திலும், ‘தல’ என்று ரசிகர்கள் மத்தியிலும் அழைக்கப்படும் அவர், சினிமா டைட்டில்களில் ‘அல்டிமேட் ஸ்டார்’ என்று இடம்பெற்ற பட்டப்பெயரை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அதுபோல், ‘காதல் மன்னன்’ என்ற பட்டத்தையும் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லிவிட்டார். கடந்த 1992ல் தெலுங்கில் ‘பிரேம புஸ்தகம்’ என்ற படத்தில் அறிமுகமான அவர், 1993ல் செல்வா இயக்கிய ‘அமராவதி’ என்ற படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானார். அவரது ஜோடியாக, பெங்களூரு சங்கவி அறிமுகமானார். சக போட்டியாளர்கள் என்று கருதப்படும் விஜய்யுடன் இணைந்து ‘ராஜாவின் பார்வையிலே’ படத்திலும், விக்ரமுடன் இணைந்து ‘உல்லாசம்’ படத்திலும், பிரசாந்துடன் இணைந்து ‘கல்லூரி வாசல்’ படத்திலும் அஜித் நடித்துள்ளார். ஆரம்பகாலத்தில் சில படங்களில் அஜித்துக்கு வேறு சிலர் டப்பிங் பேசினர். அதில் குறிப்பிடத்தக்க ஹீரோ, விக்ரம். ‘அமராவதி’ படத்தில் அஜித்துக்கு விக்ரம் டப்பிங் பேசினார். 1971 மே 1ம் தேதி தெலங்கானா மாநிலத்தில் இருக்கும் ஒரு ஊரில் பிறந்த அஜித், 1986ல் ஆசான் மெமோரியல் சீனியர் செகண்டரி ஸ்கூலில் 10ம் வகுப்பு படித்தார். ஆன்மீகம், ஜோதிடம், ஜாதகம், சகுனம், ராசி போன்ற விஷயங்களில் அதிக நம்பிக்கை கொண்ட அவர், ‘வாழு; வாழ விடு’ என்று அடிக்கடி சொல்வார். அஜித் தந்தை பி.சுப்பிரமணியம், கடந்த 24ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அம்மா மோகினி. அனில் குமார், அனூப் குமார் என 2 சகோதரர்கள் இருக்கின்றனர். தனது தாயார் பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார், அஜித்.
சரண் இயக்கிய ‘அமர்க்களம்’ படத்தில் தனது ஜோடியாக நடித்த ஷாலினியை தீவிரமாக காதலித்த அஜித், கடந்த 2000 ஏப்ரல் 24ம் தேதி அவரை திருமணம் செய்தார். பிறகு ஷாலினி சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு, முழுமையான குடும்பத்தலைவியாக மாறினார். இறகுப்பந்து விளையாடுவதில் ஷாலினி கெட்டிக்காரர். அவருடன் அஜித் இறகுப்பந்து விளையாடும்போது, இருதரப்பு நண்பர்களும், யார் ஜெயிப்பது என்று பந்தயம் கட்டுவார்கள். இதனால் அஜித், தன் மனைவி ஜெயிப்பதற்காக சுமாராக விளையாடுவார். இதையறிந்து ஷாலினி நெகிழ்ச்சி அடைந்து கண் கலங்குவார். ‘விட்டுக்கொடுத்து வாழ்ந்தால், வாழ்க்கையில் எந்தப் பிரச்னையும் வராது’ என்று அஜித் அடிக்கடி சொல்வார். தனது பங்களாவில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் கேளம்பாக்கம் அருகில் வீடு கட்டி, அதை அவரவர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ள அவர், அந்த ஊழியர்கள் அங்கிருந்து பங்களாவுக்கு வந்து செல்ல, தனி வேன் வாங்கிக் கொடுத்துள்ளார். ஊழியர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி மற்றும் மருத்துவக் காப்பீடு பாலிசி எடுத்துக் கொடுத்துள்ளார். தனது ஊழியர்களின் வாரிசுகள் மேற்படிப்பு படிக்க உதவி ெசய்யும் அஜித், குறைந்தது 80 சதவிகிதம் மதிப்பெண்கள் வாங்கியிருக்க வேண்டும் என்று அவர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார். ‘யாருடைய சிபாரிசு மூலமும் கல்லூரியில் சீட் வாங்கிக்கொடுக்க மாட்டேன்’ என்று அவர் கூறியுள்ளார். அஜித், ஷாலினி தம்பதிக்கு அனொஷ்கா என்ற மகள், ஆத்விக் என்ற மகன் உள்ளனர்.
ரசிகர்கள் தங்களை மறந்து, தங்கள் குடும்பத்தினரை மறந்து தன்னைக் கொண்டாட வேண்டாம் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் அஜித், கடந்த 2011ல் தனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம் என்று கலைத்துவிட்டார். பைக் ரேஸிங், ஏரோமாடலிங் அவரது பொழுதுபோக்கு. ஷூட்டிங் இல்லாத நாட்களில், கேளம்பாக்கம் பண்ணை வீட்டில், குட்டி ரக விமானங்களை ரிமோட் மூலம் இயக்குவார். விமானம் ஓட்டக்கூடிய நடிகர்களில் அஜித்தும் ஒருவர். பைலட் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளார். இந்தியில் ஷாருக்கான் நடித்த ‘அசோகா’ படத்திலும், ஸ்ரீதேவி நடித்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்திலும் அவர் நடித்துள்ளார். இவ்விரு படங்களும் தமிழில் டப்பிங் செய்யப்பட்டது. ஸ்ரீதேவியின் தீவிர ரசிகரான அஜித், அவரது வேண்டுகோளுக்காக ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் நடித்தார். இதற்காக அவர் சம்பளம் வாங்கவில்லை. அஜித் நடிக்கும்போது பேசிய ‘அது…’ என்ற வசனம், திடீரென்று ரசிகர்களிடம் பிரபலமானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘தீனா’ படத்தில் நடித்த அஜித்தைப் பார்த்து மகாநதி சங்கர், ‘தல’ என்று சொல்வார். அந்த ஒற்றை வார்த்தையே அஜித்துக்கு நிரந்தரப் பட்டமானது. ‘தல’ என்றால், அது அஜித்தை மட்டுமே குறிக்கும் என்று ரசிகர்கள் சொன்னார்கள். ஆனால், ‘தல’ என்று சொல்வதை விரும்பாத அஜித், தன்னை ‘ஏ.கே’ என்றோ அல்லது ‘அஜித்’ என்றோ அழைக்க வேண்டும் என்று அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்தார். திரைப்படம் தயாரிக்கவும், படங்களை விநியோகம் செய்யவும், ‘ஏ.கே இன்டர்நேஷனல்’ என்ற கம்பெனியை தொடங்கினார். படப்பிடிப்பு இடைவேளையில் நடிகருக்கோ அல்லது நடிகைக்கோ தெரியாமல், அவர்களின் அற்புதமான தருணங்களை கேமராவில் பதிவு செய்வது அஜித்தின் விசேஷ குணம். ஒருமுறை அப்புக்குட்டியை ஸ்டுடியோவுக்கு வரவழைத்து, தனது குழுவினரைக் கொண்டு அவரை விதவிதமான கோணங்களில் போட்டோ எடுத்தார். அதை மீடியாவுக்கும் கொடுத்தார். அதுபோல் ஸ்ருதிஹாசன் மற்றும் தனது மைத்துனி (பேபி) ஷாமிலியை வைத்து தனி போட்டோசெஷன் நடத்தினார்.
10ம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திய அஜித், முதலில் ஒரு கார்மெண்ட் கம்பெனியில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்தார். அப்போது தன்னை விதவிதமாக போட்டோ எடுத்து, மாடலிங் செய்ய வாய்ப்பு தேடினார். பிறகு ஓரிரு வாய்ப்புகள் கிடைத்து மாடலிங்கும் செய்தார். சோழா பொன்னுரங்கம் தயாரித்த ‘அமராவதி’ படத்தில் அறிமுகமான அஜித்துக்கு அப்போது ₹5 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது. இன்று ₹110 கோடி வாங்குவதாக சொல்கிறார்கள். ரேஸில் அஜித்துக்கு ரோல் மாடல், அயர்டன் சென்னா. அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி அவர் மரணம் அடைந்தார். பாலு மகேந்திரா இயக்கிய ‘ராமன் அப்துல்லா’ படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னை, பெப்சி தொழிலாளர்களுக்கும், திரைப்படத் தயாரிப்பு மற்றும் இயக்குனர்களின் துறையினருக்கான பிரச்னையாக மாறி விஸ்வரூபம் எடுத்தது. அப்போது துணிச்சலுடன் களத்தில் இறங்கிய அஜித், திரைப்படத் தொழிலாளர்கள் அமைப்பான பெப்சிக்கு ஆதரவாகப் பேசினார். இதில் தயாரிப்புத் துறையினர் அஜித்துக்கு எதிராக மாறி, இனி அவரை வைத்துப் படம் தயாரிக்கக்கூடாது என்று ரகசிய முடிவு செய்தனர். நாளடைவில் அது மாறிவிட்டது. ஒரு பேட்டியில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், ‘தலன்னு யாரையும் எனக்கு தெரியாது. அவரை வைத்து நான் படம் இயக்க மாட்டேன்’ என்று சொன்னார். இவ்விஷயத்தைப் பெரிதுபடுத்தாத அஜித், கவுதம் வாசுதேவ் மேனனுக்கு பொருளாதாரப் பிரச்னை ஏற்பட்டபோது, தானாக முன்வந்து கால்ஷீட் கொடுத்து நடித்தார். அப்படம், ‘என்னை அறிந்தால்’. படப்பிடிப்பில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில், பிரியாணி சமைப்பது அஜித்தின் வழக்கம். ருசியாகச் சமைத்து அனைவருக்கும் பரிமாறுவார். பொங்கல் சமைப்பார். உருளைக்கிழங்கு பொரியல், சாம்பார், சிக்கன் வறுவல் உள்பட அனைத்திலும் அஜித் எக்ஸ்பர்ட்.
வீட்டிலும், வெளியிடங்களிலும் காபி அல்லது பழரசம் அருந்தும்போது, வழக்கமாக அனைவரும் பயன்படுத்தும் வலது கைக்குப் பதிலாக, தனது இடது கையால் கோப்பையைப் பிடித்துக்கொண்டு பருகுவார் அஜித். காரணம், வலதுபுறம் அனைவரும் பயன்படுத்தி எச்சிலாகி இருக்கும். அதனால், நோய்த்தொற்றுப் பிரச்னைகள் ஏற்படலாம். அதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது. உமர்முக்தார் சொன்ன, ‘என் வாழ்க்கையில் இனி நேற்று என்பது இல்லை. கண் திறந்தால் ஜனனம். கண் மூடினால் மரணம்’ என்ற வரிகள், அஜித்துக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். திருப்பதிக்கு நடந்து சென்று வெங்கடாசலபதியை தரிசனம் செய்துள்ளார். தனி வரிசையில் நிற்காமல், பொதுமக்கள் எப்படி காத்திருந்து தரிசனம் செய்வார்களோ அதையே பின்பற்றுவார். தேர்தலில் வாக்களிக்கும்போதும் விசேஷ அனுமதி கேட்க மாட்டார். மக்களுடன் வரிசையில் நின்று வாக்களிப்பார். அவர் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று வந்த நாட்களும் உண்டு. 13க்கும் மேற்பட்ட ஆபரேஷன்கள் செய்திருந்தாலும், ஏகப்பட்ட மருந்து மற்றும் மாத்திரைகள் உட்கொண்டாலும், படப்பிடிப்பில் துளியளவும் உற்சாகம் குறையாமல் இருப்பது அஜித்தின் வழக்கம். ஒருமுறை விஜய்யிடம், ‘அஜித்திடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு விஜய், ‘அஜித்தின் அளவற்ற தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்தது’ என்று சொன்னார். தனது நெருங்கிய நண்பராக இருந்த சரண் இயக்கிய ‘அசல்’ படத்தில், திரைக்கதை எழுதுவதில் அஜித் உதவி செய்தார். அப்படத்தின் டைட்டிலில் அதற்கான கார்டு இடம்பெற்றது. ஆனால், அஜித்துக்கு படம் இயக்குவதில் ஆர்வம் இல்லை. ரஜினிகாந்த் வழங்கிய ‘ஹிமாலயன் மாஸ்டர்ஸ்’ என்ற புத்தகம், அஜித் வாழ்க்கையை சற்று மாற்றிவிட்டது. வெளிநாடு மற்றும் உள்நாட்டு நாணயங்கள், தபால் தலைகள், கைக்கடிகாரங்கள், மினியேச்சர் ஹெல்ெமட்டுகள், அதிநவீன கேமராக்கள் சேகரிப்பது அஜித்தின் வழக்கம்.