தேனி: நடிகர் செவ்வாழை ராஜூ உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார். தேனி கம்போஸ்ட் ஓடைத்தெருவை சேர்ந்தவர் செவ்வாழை ராஜூ (70). இவர், ஆரம்ப காலங்களில் நாடக நடிகராக இருந்தார். அதிமுக விவசாய அணி மாவட்ட செயலாளராக இருந்தார். பின்னர் இயக்குனர் பாரதிராஜா மூலம் கிழக்கு சீமையிலே படத்தில் முதன் முதலில் நடித்தார். பருத்தி வீரன் படத்தில், டைரக்டர் அமீர் ‘பிணந்தின்னி’ என்னும் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். கரகரப்பான இவரது குரல்வளம் பேசப்பட்டது. இந்த கதாபாத்திரம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து மைனா, கந்தசாமி, மெர்சல், சம்மர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார்.
உடல் நலக்குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செவ்வாழை ராஜூ, சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். அவரது உடல் தேனி கம்போஸ்ட் ஓடைத்தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று காலை 11 மணி அளவில், செவ்வாழை ராஜூவின் பூர்வீக கிராமமான வருசநாடு அருகே உள்ள கோரையூத்து கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. செவ்வாழை ராஜூவின் மனைவி கொண்டம்மாள். செவ்வாழைராஜூவின் கடைசி மகன் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி, தற்போது அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளராக உள்ளார்.