புதுடெல்லி: நடிகை ராஷ்மிகாவின் மார்பிங் வீடியோ விவகாரத்தில் டெல்லி காவல்துறைக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுவரை எவரையும் கைது செய்யாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.பாலிவுட் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ‘டீப் ஃபேக்’ எனப்படும் மார்பிங் வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன் சமூக ஊடக தளங்களில் வைரலானது. இதனை பல்வேறு தரப்பினரும் கண்டித்தனர். ஒன்றிய அரசும், இதுபோன்ற வீடியோக்களை மார்பிங் செய்து பரப்பி விடுவோர் மீது கடுமையான சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது.
இந்நிலையில் டெல்லி மகளிர் ஆணையம், ராஷ்மிகா மந்தனாவின் விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதுதொடர்பாக டெல்லி காவல்துறைக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில், ‘மார்பிங் வீடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நடிகை ராஷ்மிகா மந்தனாவும், தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். யாரோ ஒருவர் தனது புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி உள்ளார் என்று கூறியுள்ளார். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இவ்விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரின் நகல், குற்றம் சாட்டப்பட்டவர்களின் விவரங்கள் ஆகியவற்றை வரும் 17ம் தேதிக்குள் டெல்லி மகளிர் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் வெளியிட்ட பதிவில், ‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் செய்யப்பட்டு வீடியோவாக வெளியாகி உள்ளது. டெல்லி மகளிர் ஆணையம் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த போலி வீடியோவை உருவாக்கியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். மேற்கண்ட விவகாரத்தில் அடையாளம் தெரியாத சிலர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.