சென்னை: ஜீவா, கார்த்திகா, அஜ்மல் நடித்துள்ள படம், ‘கோ’. இதை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். கடந்த 2011ல் திரைக்கு வந்து வெற்றிபெற்ற இப்படம், வரும் மார்ச் 1ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. கோவிட் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்த கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தின் ரீ-ரிலீஸ் குறித்து எல்ரெட் குமார் கூறுகையில், ‘நான் தயாரித்த ‘கோ’ படத்தின் வெற்றி விவரிக்க முடியாத மனநிறைவைக் கொடுத்தது. ரசிகர்கள் இப்படத்தை சினிமாவுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக கொண்டாடினர்.
இது வெளியாகி 13 ஆண்டுகள் ஆகிறது. கே.வி.ஆனந்தின் மேஜிக் மற்றும் ஜீவா, அஜ்மல் ஆகியோரின் அபாரமான நடிப்பு மற்றும் ஹாரிஸ் ஜெயராஜின் அற்புதமான இசையால் படம் சோர்வு ஏற்படுத்தாமல் ரசிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. மிகச்சரியான ஒரு கதையை பொறுப்புணர்வுடன் ரசிகர்களுக்கு கொண்டு சென்றதால்தான் படம் வெற்றிபெற்றது. வரும் மார்ச் 1ம் தேதி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மீண்டும் வெளியிடுகிறோம்’ என்றார்.