சென்னை: இந்தியா முழுக்க ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளியானது. இப்படம் கேரளாவிலுள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களை முஸ்லிமாக மதம் மாற்றி, ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்துவிடுகிறார்கள் என்ற கதையுடன் உருவாகியுள்ளது. இப்படத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. ‘படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்பட்டு விட்டதால், இப்படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது’ என்று நீதிமன்றம் கூறியது. இதையடுத்து படம் நேற்று வெளியானது.
இந்நிலையில், தமிழில் உருவாகியுள்ள ‘ஃபர்ஹானா’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முஸ்லிம் பெண்ணாக நடித்துள்ளார். அவர் சமூக கட்டுப்பாடுகளை மீறி கால்சென்டருக்கு பணிக்கு செல்வது போல் கதை அமைந்துள்ளது. எனவே, இப்படத்துக்கும் முஸ்லிம் மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் குடியிருக்கும் தி.நகர் வீட்டுக்கும், இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் வசிக்கும் துரைப்பாக்கம் வீட்டுக்கும், தி.நகரிலுள்ள தயாரிப்பாளர் அலுவலகத்துக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் தியேட்டரில் நேற்றிரவு நடந்த இப்படத்தின் நிகழ்ச்சியில் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா, அனுமோல், இயக்குனர் நெல்சன் வெங்கடேசன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, கவிஞர் மனுஷ்யபுத்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். தியேட்டரை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 10 பெண் போலீசார் உள்பட 20 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.