தென்னிந்திய மொழிகளில் அதிக ஆர்வத்துடன் நடித்து வருபவர், மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. ‘கிங் ஆஃப் கொத்தா’ படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடித்துள்ள அவருக்கு நல்ல பாராட்டு கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த பூங்குழலி என்ற கேரக்டர் எனக்கு அதிக பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளது. இவ்வளவு பேர் என்னைப் பாராட்டுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இப்படத்தின் மாபெரும் வெற்றி எனக்கு பல்வேறு கதவுகளை திறந்துள்ளது. புதுப்பட வாய்ப்புகள், வெப்தொடர் வாய்ப்புகள் மட்டுமின்றி, மக்கள் மனதில் எனக்கென்று ஒரு இடம் கிடைத்துள்ளது.
இதனால், இதற்கு முன்பு நான் நடித்த பல படங்களை ரசிகர்கள் பார்த்துவிட்டு என்னிடம் பேசுகின்றனர். இனி நான் அதிக சவாலான, இதுவரை நடிக்காத வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க முக்கியத்துவம் தருவேன். மணிரத்னம் இயக்கத்தில் நடித்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் 2 பாகங்களும் எனது பொறுப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. அதிகமான படங்களில் நடிக்க வேண்டும் என்பதை விட, குறைந்த எண்ணிக்கையாக இருந்தாலும் கூட, தரமான படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நல்ல கேரக்டர் என்றால், அது எவ்வளவு சின்ன கேரக்டராக இருந்தாலும் கவலைப்படாமல் நடிப்பேன். தற்போது கதை மற்றும் அதில் அமைந்துள்ள எனது கேரக்டர் தேர்வில் அதிக கவனம் செலுத்துகிறேன். பிசியாக நடித்தாலும், தொடர்ந்து திரைப்படங்கள் தயாரிப்பேன்’ என்றார்.