ஐதராபாத்: தெலுங்கு சினிமாவில் சில ஹீரோக்களுக்கு சொந்தமாக சினிமா ஸ்டுடியோக்கள் உள்ளன. இந்நிலையில் டோலிவுட் சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு எஎம்பி சினிமாஸ் என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றை தெலங்கானா மாநிலம், கொத்தகுடாவில் திறந்தார். இந்நிலையில் புஷ்பா படம் மூலம் உலகப் புகழ் பெற்ற அல்லு அர்ஜுனும் தியேட்டர் தொழிலில் இறங்குகிறார். மகேஷ் பாபு பாணியில் அவரும் மல்டிபிளக்ஸ் தியேட்டரை திறக்க உள்ளார். ஏஷியன் சினிமா நிறுவனத்துடன் இணைந்துதான் மகேஷ்பாபு தனது தியேட்டரை திறந்தார்.
அதே நிறுவனத்துடன் அல்லு அர்ஜுனும் கைகோர்த்துள்ளார். இப்போது ஏஏஏ (ஏஷியன் சினிமா, அல்லு அர்ஜுன்) என்ற பெயரில் தியேட்டர் தொடங்க உள்ளனர். ஐதராபாத்திலுள்ள சத்யம் மாலில் இந்த 5 ஸ்கிரீன்கள் கொண்ட தியேட்டரை அல்லு அர்ஜுன் துவக்க இருக்கிறார். இதன் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. ஏஷியன் சினிமா நிறுவனம், இதுபோல் மேலும் சில தியேட்டர்களை திறக்க நடிகர்கள் சிரஞ்சீவி, பிரபாஸ், பவன் கல்யாண் உள்ளிட்டோருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.