சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம், ‘தங்கலான்’. ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். ‘பூ’ பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி நடித்துள்ளனர். கோலார் தங்க வயல் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம், வரும் ஜனவரி 26ம் தேதி பல்வேறு மொழிகளில் திரைக்கு வருகிறது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. அப்போது விக்ரம் பேசியதாவது:
உலகம் முழுவதும் பிரபலமான ‘டைட்டானிக்’ படத்தில் காதல்தான் கதை. ஆனால், டைட்டானிக் கப்பலை அதன் பின்னணியில் வைத்துவிட்டு, காதலை சித்தரித்தார்கள். அதுதான் அப்படத்துக்கு வலு. அதுபோல் இப்படத்தில் அந்த காலகட்டத்தில் ஒரு சமுதாயம் எப்படி இருந்தது, மக்கள் எப்படி வாழ்ந்தனர் என்பதை காட்டும். ஒவ்வொரு காட்சியும் மக்களை அழ வைக்க வேண்டும் என்ற நோக்கில் இருக்காது. யதார்த்தமாகவும், ரொம்ப உண்மையாகவும் இருக்கும். படத்தில் எந்த காட்சியையும் செட் போட்டு படமாக்கவில்லை. கே.ஜி.எஃப் பகுதியில் பல மாதங்கள் தங்கி உருவாக்கினோம். இந்த மாதிரி ஒரு அனுபவம் இனி வேறொரு படத்துக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை. தினமும் எனக்கு 4 மணி நேரத்துக்கு மேல் மேக்கப் போடுவார்கள். பயங்கரமாக குளிரும் என்றாலும், தினமும் காலையில் எழுந்து ஆர்வத்துடனும், புத்துணர்ச்சியுடனும் படப்பிடிப்புக்கு வருவேன். கோவணம்தான் கட்டியிருப்பேன். என் உடம்பு முழுக்க சேறும், சகதியும் பூசுவார்கள். கடுமையான வெயிலில் கஷ்டப்பட்டு நடித்தேன். நான் மற்றும் ஏராளமான டிராமா கலைஞர்கள் உள்பட அனைவரும் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் நடித்தோம். ஷூட்டிங் ஸ்பாட்டில் தேள், பாம்பு என்று சரளமாக வரும். ெகாடிய விஷம் கொண்ட அவை அனைத்தும் பயமுறுத்தினாலும், படக்குழுவினர் துணிச்சலுடன் பணியாற்றினோம்.
பா.ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படத்தில் இருந்து அவரது படங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது ‘சார்பட்டா பரம்பரை’ படத்தைவிட ‘தங்கலான்’ படத்தின் மேக்கிங்கை 100 மடங்கு அதிகமாக உயர்த்தி படமாக்கியுள்ளார். அவருடன் இணைந்து பணியாற்றியது உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவம். இப்படம் ஒரு சாதாரண படமாக இருக்காது. இந்திய சினிமா அளவில் இது ஒரு புதிய பார்வையை திறந்து வைக்கும். ஒவ்வொரு படத்துக்கும் நான் ஏன் கஷ்டப்பட வேண்டும் என்று கேட்கின்றனர். இன்னும் இதைவிட அதிகமான கஷ்டத்தை கொடுக்கக்கூடிய கேரக்டர் எதுவாக இருந்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். இப்படம் பல்வேறு தேசிய, மாநில விருதுகளை அள்ளிக்கொண்டு வரும். ஜி.வி.பிரகாஷ் குமாரின் ஒவ்வொரு பாடலையும் கேட்கும்போது ஆர்வம் அதிகரிக்கும். பின்னணி இசையிலும் அவர் மிரட்டியிருக்கிறார். ஒளிப்பதிவு, எடிட்டிங், காஸ்ட்யூம்ஸ், லொகேஷன்ஸ், தயாரிப்பு என்று அவரவர் வேலையை மிகச்சிறப்பாக மேற்கொண்டார்கள். ‘தங்கலான்’ படம் எனது சினிமா கேரியரில் மறக்க முடியாத படமாக இருக்கும்.