பல்வேறு மொழிகளில் நடித்து வரும் அஞ்சலியின் 50வது படமாக உருவாகிறது, ‘ஈகை’. இப்படத்தின் ஷூட்டிங் நேற்று சென்னையில் தொடங்கியது. முக்கிய வேடங்களில் பாரதிராஜா, சுனில், இளவரசு, புகழ், ஹரி, அபி நட்சத்திரா, நிஷாந்த் ரகு, கிருஷ்ணசந்தர், காஷ்யப் பார்பயா நடிக்கின்றனர். கிரீன் அமூசிமெண்ட் மற்றும் டி3 புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாக்கப்படும் இப்படத்தின் ஷூட்டிங் சென்னை, ஐதராபாத், மும்பை ஆகிய பகுதிகளில் நடக்கிறது.
இது சஸ்பென்ஸ் மற்றும் சமூக கருத்துகள் நிறைந்த படமாக உருவாகிறது. ஈகை குணம் குறைந்துவிட்ட இன்றைய சூழ்நிலையில், சமூகத்தில் நிலவும் வன்முறைகளும், மனிதாபிமானமற்ற வாழ்வியலும் நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில், அறம் நிறைந்த பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக படம் உருவாக்கப்படுகிறது என்றார், இயக்குனர் அசோக் வேலாயுதம். இப்படத்தை தங்கராஜ் லட்சுமி நாராயணன், ஜெ.தினகர் தயாரிக்கின்றனர். தர் ஒளிப்பதிவு செய்ய, தரண் குமார் இசை அமைக்கிறார். விவேகா, அறிவு பாடல்கள் எழுதுகின்றனர்.