ஐதராபாத்: ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’பாகுபலி’ ’பாகுபலி 2’ ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை அனுஷ்கா தனது 50வது படமாக சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அனுஷ்கா கடந்த 2005ம் ஆண்டு முதல் தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார் என்பதும் குறிப்பாக தமிழில் அவர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா உள்பட பல பிரபலங்களுடன் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் ’மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற திரைப்படத்தில் நடித்த அனுஷ்கா தற்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் நடிக்க இருக்கும் 50வது படமாக அவர் ஏற்கனவே நடித்த சூப்பர் ஹிட் ஆன ’பாகமதி’ படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.