சமுத்திரக்கனி, அபிராமி தம்பதிக்கு பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. எனவே, ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கின்றனர். இந்த நேரத்தில், அக்குழந்தையை யாருக்கு தத்து கொடுத்தோம் என்றே தெரியாத ஒரு பெண், அக்குழந்தையை தன்னிடம் திருப்பிக் கொடுக்கும்படி கேட்கிறார். அக்குழந்தையை அப்பெண்ணிடம் இருந்து வாங்கி சமுத்திரக்கனியிடம் கொடுத்த நர்ஸ் வினோதினி வைத்தியநாதன் வெளிநாட்டுக்கு ஓடிவிடுகிறார். தனது குழந்தை கிடைக்காத நிலையில் தவிக்கும் அப்பெண், லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் ‘சொல்லாததும் உண்மை’ என்ற நிகழ்ச்சிக்கு வந்து, தன் குழந்தையை வாங்கிக் கொடுக்கும்படி கேட்கிறார். ஆனால், எதிர்பார்த்த முடிவு கிடைக்காத நிலையில், தத்து கொடுத்த பெண்ணின் பிரச்னை நீதிமன்றத்துக்குச் செல்கிறது. குழந்தை கடத்தல் வழக்கு சமுத்திரக்கனி, அபிராமி மீது பாய்கிறது.
இறுதியில் குழந்தை யாருக்குக் கிடைத்தது? சமுத்திரக்கனி, அபிராமி கைதானார்களா என்பது மீதி கதை. குழந்தைக்காக ஏங்கும் பாசமுள்ள தம்பதியாக சமுத்திரக்கனி, அபிராமி இருவரும் தங்கள் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளனர். குழந்தையைப் பறிகொடுத்துவிட்டு தவிக்கும் காட்சியில் அபிராமி ரசிகர்களையும் அழ வைக்கிறார். அசோக் குமார், மிஷ்கின், ஆடுகளம் நரேன், பாவெல் நவகீதன், ரோபோ சங்கர், அனுபமா குமார் தங்கள் கேரக்டரை கச்சிதமாகச் செய்துள்ளனர். தத்து கொடுத்த பெண்ணாக முல்லையரசி சிறப்பாக நடித்துள்ளார். குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பதில் இருக்கும் சட்டச் சிக்கல்களை இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் சொன்னவிதம் அருமை என்றாலும், பல காட்சிகள் டி.வி நிகழ்ச்சி ேபால் கடந்து செல்கின்றன. டி.எஸ்.கிருஷ்ணசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இளையராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் காட்சிகளின் கனத்தைக் கூட்டியிருக்கின்றன.