சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி நினைவிடத்துக்கு நாள்தோறும் தொண்டர்கள் வந்து மரியாதை செலுத்திவிட்டு செல்கின்றனர். மேலும், அங்குள்ள கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு, தங்கள் அனுபவங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை கலைஞர் கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்திய நடிகர் வடிவேலு, பிறகு அங்கு அமைக்கப்பட்டுள்ள கலைஞர் உலகம் அருங்காட்சியத்துக்கு சென்று பார்வையிட்டார். இதை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள மெய்நிகர் தொழில்நுட்பத்தின் மூலம் கலைஞருடன் கலந்துரையாடி மகிழ்ந்தார். அது சம்பந்தப்பட்ட போட்டோவும், வீடியோவும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து வடிவேலுவிடம் கேட்டபோது, ‘ஆமாம், கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு வந்தேன். புதுப்பிக்கப்பட்ட கலைஞரின் நினைவிடம் மிக பிரமாண்டமாக பிரமிப்பூட்டுகிறது’ என்றார்.