பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடிக்கும் அருண் விஜய், இதற்கு முன்பு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் எமி ஜாக்சன் ஜோடியாக நடித்த ‘மிஷன் சாஃப்டர் 1: அச்சம் என்பது இல்லையே’ படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டார். இதை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். படம் குறித்து ஏ.எல்.விஜய் கூறுகையில், ‘இதுவரை அருண் விஜய் நடித்த படங்களிலேயே மிகப் பிரமாண்டமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்துக்காக, நான்கரை ஏக்கர் பரப்பளவில் ஜெயில் அரங்கு உள்பட பல்வேறு அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம். அருண் விஜய் பல்வேறு சோதனைகளைச் சந்தித்து இந்த கேரக்டரில் நடித்துள்ளார். ஒரு காட்சியில் அவரது காலிலுள்ள தசைநார் கிழிந்துவிட்டது.
கடுமையான வலி ஏற்பட்ட நிலையில் கதறித்துடித்த அவர், கேமரா முன்பு வந்து நின்று நடித்தபோது, அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் நடித்தார். அவருடைய அர்ப்பணிப்பு படக்குழுவினரை பிரமிக்க வைத்தது. இப்படத்துக்கு முதலில் சூட்டிய பெயர், ‘அச்சம் என்பது இல்லையே’. ஆனால், லைகா புரொடக்ஷன்ஸ் இப்படத்திற்குள் வந்த பின்பு, இதை பான் இந்தியா படமாக வெளியிட முடிவு செய்தோம். எனவே, மற்ற மொழிகளுக்கு நன்கு அறிமுகமாகும் வகையில், ‘மிஷன் சாஃப்டர் 1’ என்று பெயரிட்டோம். நான் அறிமுகப்படுத்திய எமி ஜாக்சன், இதில் அதிரடி வேடத்தில் நடித்துள்ளார். ஆக்ஷனுடன் கூடிய சென்டிமெண்ட் படமாக உருவாக்கியுள்ளேன். முதல்முறையாக வேறொருவரிடம் இருந்து கதை வாங்கி இயக்கியுள்ளேன். படத்தில் தந்தைக்கும், மகளுக்குமான பாசம் ரசிகர்களின் மனதைப் பிழிந்தெடுக்கும்’ என்றார்.