சமீப காலங்களில் கவனிக்க கூடிய பாடலாசிரியராக இருக்கிறீர்கள்? இந்தப் பணி உங்களுக்கு எப்படி இருக்கிறது ?
மிகவும் நிறைவாக இருக்கிறது. வணிக ரீதியிலான வெற்றிப் பாடல்களை கொடுக்கும் அதே நேரம், உணர்வு ரீதியிலான உறவுகளை எடுத்து சொல்லும் கதைக்களம் சார்ந்த பாடல்கள் எல்லா பாடலாசிரியர்களுக்கும் அமைந்து விடாது. அந்த வகையில் எனக்கு அது அமைந்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி.
விஜய் ஆண்டனியுடன் தொடர்ந்து பாடல்கள் எழுதி வருகிறீர்கள்? அவருடனான உங்கள் பாட்டுப்பயணம் குறித்து சொல்லுங்க ?
எனது பாட்டுப்பயணத்தில் நிறைய வேகத் தடைகள் இல்லாமல் இலகுவாக நான் பயணம் செய்வதற்கான அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தவர் விஜய்ஆண்டனிதான். தொடர்ந்து அவரோடு நான் பயணிப்பதால் என்ன மாதிரியான வரிகளை அவருக்கு எழுத வேண்டும் என்பதை நான் புரிந்து வைத்திருக்கிறேன். நான் என்ன மாதிரி எழுதுவேன் என்பதை அவரும் தெரிந்து வைத்திருக்கிற காரணத்தினால் எங்கள் பயணம் எளிமையாக இருப்பதாக கருதுகிறேன்.
பிச்சைக்காரன் 2 படத்தில் பாடல் எழுதிய அனுபவம் எப்படி இருந்தது?
வழக்கமாக விஜய்ஆண்டனி அவர்களுக்கு எழுதுவதை விட, இந்தப் படம் கூடுதல் உழைப்பை எடுத்துக் கொண்டது. அதற்கு காரணம் எந்த சமரசமும் இல்லாமல் பணியாற்றியதுதான். கோயில் சிலையே பாடல் அண்ணன் தங்கைகளுக்கான ஒரு ஆன்தம் ஆக அமைந்திருக்கிறது. நானா புலுக்கு பாடல் கமர்ஷியலாக மிகப்பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. கள்ளூறும் பூவே என்ற மெல்லிசை பாடலும் அற்புதமாக வந்திருக்கிறது. மொத்தம் மூன்று பாடல்கள் எழுதியிருக்கிறேன்..
குறுகிய காலத்தில் அஜித், ரஜினி போன்ற பெரிய நடிகர்களுக்கு பாடல் எழுதியிருக்கிறீர்கள்? எப்படி சாத்தியமானது ?
அஜித், ரஜினி இருவருக்குமே நான் பாடல் எழுதியதற்கு இயக்குநர் சிவா சார் மிக முக்கியமான காரணம். அவர் என் மீது வைத்த நம்பிக்கைதான் என் வாழ்வின் புதிய பக்கத்தை திறந்து வைத்தது. அவரது படங்கள் எல்லாமே படு மாஸாக இருக்கும். ஆனால் அவரோடு பழகிப் பார்த்தால் ஒரு குழந்தை போல இருப்பார். அவரோடு பாடல் எழுதுவது கல்லூரிக்கு சென்று வருவது போல உற்சாகமாக இருக்கும். இந்த நேரத்தில் இசையமைப்பாளர் இமான் அவர்களுக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
சமீபத்தில் கிடைத்த மறக்க முடியாத பாராட்டு?
சிறு வயதிலேயே தன் தங்கையை இழந்த முகம் தெரியாத ஒரு அண்ணன் கோயில்சிலையே பாடலை பார்த்து விட்டு, என்னை பார்த்தே ஆக வேண்டும் என என் வீடு தேடி வந்து கட்டியணைக்கையில் என் தோள்களில் சிந்திய கண்ணீர் துளிதான் சமீபத்தில் எனக்கு கிடைத்த ஆகச்சிறந்த பாராட்டு
திரைப்பாடல்களை போலவே ஆல்பம் பாடல்களிலும் கவனம் செலுத்தி வருகிறீர்கள் போலவே?
என்னைப் பொறுத்த வரை எல்லா பாடல்களையும் சமமாகத்தான் பார்க்கிறேன். திரைப்பாடல் என்பது ஒரு சுவாரஷ்யமான நாவலில் தேவைப்படும் சூழலில் அந்த கதாபாத்திரங்களுக்காக எழுதுவது போல இருக்கும். ஆல்பம் பாடல் என்பது ஒரு சிறுகதைக்குள் சென்று எழுதுவது போல இருக்கும். சமீபத்தில் எனது “பொண்ணு பாக்க போறோம்”, “ஒரு சக்கரம் போலத்தான்” பார்வை போன்ற ஆல்பம் பாடல்கள் இந்த வகையை சேர்ந்ததுதான். திரைபாடல்களோடு சேர்ந்து தற்போது நிறைய ஆல்பம் பாடல்களும் எழுதி வருகிறேன்.