சென்னை: ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த ‘மீசையமுறுக்கு’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர், ஆத்மிகா. தொடர்ந்து விஜய் ஆண்டனியுடன் ‘கோடியில் ஒருவன்’, வைபவ்வுடன் ‘காட்டேரி’, உதயநிதி ஸ்டாலினுடன் ‘கண்ணை நம்பாதே’, அருள்நிதியுடன் ‘திருவின் குரல்’ போன்ற படங்களில் நடித்தார். அரவிந்த்சாமி, ஸ்ரேயாவுடன் அவர் நடித்துள்ள ‘நரகாசூரன்’ படம் ரிலீசாகவில்லை. இந்நிலையில், சென்னை வடபழநி முருகன் கோயில் அருகிலுள்ள ஆதரவற்றவர்களுக்கு ஆத்மிகா அன்னதானம் வழங்கினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனக்கு கடவுள் பக்தி அதிகம். சமூக சேவையில் ஈடுபடவும் ஆர்வம் இருக்கிறது. நடிப்பு, தொழில்நுட்ப ஈடுபாடு, மெய்ஞான பேச்சாற்றல் உள்பட பன்முகத்திறமை கொண்ட நான், ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குவதும், கஷ்டத்தில் வாடுபவர்களுக்கு உதவி செய்வதும் ஆன்மிகத்தின் உச்சமாக நினைக்கிறேன். என் சிறுவயதில் இருந்தே பொதுநல ஈடுபாடு கொண்ட நான், விரைவில் சமூக தொண்டு நிறுவனம் தொடங்கி, நல்ல காரியங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளேன்’ என்றார்.